ஞாயிறு, 13 டிசம்பர், 2020

ஒக்கிட்டுத் தாருமய்யா

சிறுவனாக இருந்த போது காதில் கேட்ட சொற்கள் பல இப்போது வழக்கில் இல்லாமலாகிவிட்டதா அல்லது இன்றைய தலைமுறை அச்சொற்களை மறந்துவிட்டனவா, இல்லை சொல்ல மறுக்கின்றதா. சில நாட்களாக "ஒக்கிடுதல்" என்ற சொல் எனக்குள் தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டிருக்கிறது, பள்ளி நாட்களில் இச்சொல்லை "Repair மற்றும் பழுது பார்த்தல்" என்ற பொருளுக்கு இணையான தூய தமிழ்ச் சொல்லாக எங்கள் ஊரில் (கீழப்பாவூர்-தென்காசி மாவட்டம்) பயன்பாட்டில் இருந்தது நினைவிலிருக்கு, ஆனால் கடந்த இரண்டு மாதத்தில் அச்சொல் எங்கிருந்தும் ஒலிக்கவில்லை.

"ஓகம்" என்ற சொல்லும் ஓகப் பயிற்சியும் "யோகா" என்று வடமொழியாகி தமிழருக்கு அந்நியமான பயிற்சியாகி இன்று அவர்களின் மொழியில் நமக்கு திருப்பியளிக்கப்படுகிறது, இந்த ஓகம் என்ற சொல்லின் இடையில் "ஓ" வுக்கும் "க" வுக்கும் இடையில் "க்" சேர்த்தால் உடல் இணையும் "ஓக்கம்" என்ற சொல் உருவாவதாக கரு.ஆறுமுகத்தமிழன் அவர்கள் ஓர் பேட்டியில் சொல்லியிருந்தார், அதிலிருந்தோ என்னவோ இந்த ஒக்கிடுதல் என்ற சொல் என்னைத் துரத்துகிறது. 

இரு உடல் இணைவதை குறிக்கும் ஓக்கம் என்ற சொல்லின் வினைச் சொல்லாகவே ஒக்கிடுதல் என்று உருவாகியிருக்கும் என்பது என் எண்ணம், உடைந்த பொருளை இணைப்பது என்ற பொருளில். இது போல் நாம் இழந்து கொண்டிருக்கும் சொற்கள் அதிகம், தமிழிலிருந்து உருவான புதிய சொல் ஒன்று வாய்மொழிப் பயன்பாட்டிலிருந்தால் வரவேற்கத் துணியலாம், உதாரணத்திற்கு பழுது பார்த்தல் ஆனால் இதற்கிணையாக ரீப்பேர் என்ற சொல்லில் நாம் புழங்குவது தமிழ் இனி மெல்லச் சாகும் என்ற வாக்கியத்தை மெய்ப்பித்துவிடும்.

சனி, 12 டிசம்பர், 2020

ஓவியம் பழகுதல்

ஒரு கணக்காக சொல்ல வேண்டுமானால் கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ந்து இல்லையென்றாலும் அவ்வப்போது ஓவியம் வரைதலுக்கான பயிற்சியை செய்கிறேன், இதில் ஏற்பட்ட ஆர்வமும் உந்துதலும் இன்றுவரை அதிகரித்தே வருகிறது அடுத்து என்ன என்ற கேள்விகள் பல இருந்தாலும் ஓர் மனப் பயிற்சியாக இதைச் செய்து வருவது நிம்மதியை விளைவிக்கிறது. 
 
எப்படி இந்த வலைத்தளம் தொடங்கும் பொழுதில் வாசிப்பே இல்லாமல் வார்த்தைகளை மடக்கி மடக்கி எழுதினேனோ அதேப் போலத்தான் வரைதலுக்கான முயற்சியின் இடையில் ஓவியம் பார்த்தலை ஓர் பழக்கமாகவோ விருப்பமாகவோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை, பின் நாட்களில் வாசிப்பால் உருவான ரசனை போல, கடந்த ஒரு வருடத்தில் பலரது ஓவியங்களை பார்ப்பதையும் உணந்து கொள்வதையும் அதிகப் படுத்தினேன் இது வரைதலுக்கு பெருந்துணையாக உள்ளது, ஒரு படைப்பை ரசிகனாகவும் சக படைப்பாளியாகவும் உணர்வதற்கு இடையில் நிச்சயமாக வேறுபாடு இருக்குமென நம்புகிறேன்.

பார்க்கின்ற பொருளையோ ஆளையோ அப்படியே சித்திரமாக தீட்டி விடுவதில் சுகமிருந்தாலும் கோடுகளின் வளைவு சுழிவுகளை உணர்ந்து பொருளின் வடிவத்தை தன் கைவிரலிடுக்கிலுள்ள பென்சில் கோடுகளாக்குவதையும் அதிலுள்ள ஒயிலையும் கண்டு இன்புறுவதே கலையின் தன்மை எனக் கொள்ளலாம். இதற்கு அடிப்படையான வடிவங்களைப் பற்றி கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம் அதற்கான பாதையை உருவாக்கிக் கொண்டு மெல்லப் பயணித்தாலே கைகூடிவிடும் சித்திரங்களும் கலை அனுபவங்களும், ஓவியம் பார்த்தலை பற்றியும் நிறைய பேசலாம்.

சனி, 5 டிசம்பர், 2020

புயல் காலம்

உனக்கென்ன

எனக்கென்ன

யாருக்கென்ன

மழைக்கென்ன

புயலுக்கே காலம்