புதன், 14 மே, 2025

யார் கையில் அதிகாரமளிக்கிறோம்

நேற்று மதியம் வீட்டில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது, ஏன் என்று தெரியவில்லை மாலை வரையில் மீளவில்லை. மடிக்கணினி மின்சாரம் தீர்ந்து உறங்கிவிட்டது. பழுது நீக்க கொடுத்திருந்த ஈருருளியை எடுத்து வருவதற்காக வெளியேறினேன். தெருவைக் கடந்து சாலையை அடையும் போது போக்குவரத்து நெருக்கடி. இடது பக்கம் குடிசை வீடுகள் இடித்து நொறுக்கப்பட்டிருந்தது. மக்கள் அவரவர் வீட்டில் இடிபாடுகளுக்கிடையே சோர்ந்து அமர்ந்திருந்தனர்.

அவர்களின் நாளை என்னவாகும் என்ற‌ அதிர்வோடு நடந்தேன். இவர்களுக்கு இடம் ஏதும் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை. முன்பொருமுறை அப்பகுதியில் கடைகளை இடிக்கத் தொடங்கியதும் மக்கள் போராட்டம் செய்தனர், வீடுகளை கை வைக்கவில்லை இப்போது வீடுகள் மொத்தமும் தரைமட்டம். ஆனாலும் இன்று காலையில் இடிந்த பகுதியில் அடுப்பு எரிந்தது, இன்னும் யாரையேனும் நம்பி உள்ளனரா எனப் புரியவில்லை.

இரு வாரத்திற்கு முன்பு பல்லாவரம் குன்றத்தூர் சாலை நான்கு வழிச் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது செய்தியாக வந்தது. தொடர்ந்து அனகாபுத்தூரில் போராட்டம் நடந்ததாகவும் செய்தி. இந்தப்பக்கம் குன்றத்தூரில் அப்படி ஏதும் போராட்டம் நடந்ததாகத் தெரியவில்லை. பொதுவாக இப்பகுதியில் நடக்கும் நிகழ்வுகளில் காணக்கிடைக்கும் அரசியல் முகங்களை இரண்டு நாளாக எங்கும் காணவில்லை. நாம் யார் கையில் அதிகாரத்தைக் கொடுக்கிறோம்...




கருத்துகள் இல்லை: