செவ்வாய், 28 நவம்பர், 2017

ஓவியத்தை கண்டடைதல்

எதற்காக வரையப்படுகின்றன என்பதைக் கடந்து வரைதல் கொடுக்கும் அகக் களிப்பே முன்வந்து முகம் மலர்கின்றது, எச்செயலுமே அதற்காகத் தான். வரையப்படும் ஓவியங்கள் கொடுக்கும் கிளர்ச்சியும் கற்றலுக்கான தொடர்ச்சியுமே நம்மை தொடர்ந்து இயக்க காரணிகளாக இருக்கிறது. தத்ரூபமான ஓவியம் ஒன்றை வரைந்து முடித்ததும் இல்லை முடிந்துவிட்டது என்பதான தோற்றம் கிடைத்ததும் சில நேரம் அதை பார்த்திருந்த பின் ஏற்படும் வெறுமையை எப்படி கடப்பது.

ஒரு உருவத்தை படத்திலுள்ளது போல அச்சசலாக வரைவதற்கு ஆரம்ப காலத்தில் கட்டங்கள் வரைந்து பயிற்சி எடுக்க தொடங்கியபின் மூன்றாவது படம் எதிர்பார்ப்பை நிறைவேற்ற நன்றாகவே அமைந்தது என்றாலும் மேற்சொன்ன வெறுமை தொற்றிக்கொண்டதாக நண்பரிடம் கூறிக்கொண்டிருக்கும் போதே மனம் அவ்வோவியத்தின் ஊடாக பயணித்தது. வெறும் கோடுகளாக நிழல்களாக அதன் வடிவங்கள் பிரித்துணரப்பட வேண்டும் என சிறு எண்ணம் கீற்றாக விழுந்தது.



அன்று மாலை வீடு அடைந்ததும் டாலியின் முகத்தைக் கொண்ட ஓவியத்தை எடுத்து சுவரில் சாய்த்துவிட்டு சிறு இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டேன். ஒவ்வொரு கோடுகளின் நீளங்களை வளைவு சுழிவுகளை உறுப்புகளை இணைத்திருக்கும் நிழல்களின் மாயத்தை என பார்வையால் தீண்டத் தீண்ட என்னிடமிருந்தே நான் கற்றுக் கொள்ள வெளி உருவாகியிருந்ததை உணர முடிந்தது. அதற்கடுத்த படத்தினை வரையும் பொழுதையும் அதன்பின்னான ஒவ்வொரு நாளையும் இவ்வாறு கடந்தபோது அடைந்த உவகை பேரின்பம்.

சனி, 18 நவம்பர், 2017

பிரியமுடன் பிக்காஸோ - வாசிப்பு

பிக்காஸோவின் ஓவியங்களைப் பற்றி வாசித்ததில்லை ஓவியங்களை கண்டு புரிந்துகொள்ள (புரிந்தால் தானே உணர முடியும் என்பதால்) முயன்று அயர்ச்சியில் கடந்து போயிருக்கிறேன். மெல்ல மெல்ல நவீன ஓவியங்களின் ஓட்டங்களை அறிதலின் மூலம் ஒருநாள் இவரது ஓவியங்கள் வசப்படும் என்ற நோக்கோடு இன்று வாங்கிய "பிரியமுடன் பிக்காஸோ" என்ற சிறுவர் நாவலை வாசிக்கத் தொடங்கினேன்.


ஓவியர் பற்றிய அறிமுகத்திற்குப் பின் சில்வெட் என்ற சிறுமியுடனான உறவினை மையமாகக்கொண்டு நீளும் கதையாடல், சிறுமியினை கோட்டோவியமாக வண்ண ஓவியமாக க்யூபிச பாணி ஓவியமாகவும் வரைந்து இறுதில் அவளை சுதந்திரமானவளாக சித்தரிக்குமொன்றை பரிசாக அளிப்பதோடு இடையிடையே ஓவியம் வரைதலுக்கு உந்துதலாக தோன்றும், தான் காணும் காட்சிகளை புரிந்துகொண்டு அதை ஓவியத்தில் கொண்டுவரும் செயல்களை விளக்கும் நோக்கோடு கதை நகர்வது சிறுவர்களுக்கேற்ற உரைநடையில் உருவாக்கப்பட்டுள்ளது.

கெண்டை மீனை வரைந்து அதை கெண்டை கோழியாக மாற்றும் புகைப்படமும் அதைப்பற்றிய சிறு உரையாடலும் இவரது கோடுகளை அறிய ஓர் வழியை விலக்கித்தருகிறது.

மிகக்குறைந்த (80) பக்கங்களே கொண்ட நூல் வாங்கி வாசிக்கலாம்.


வியாழன், 16 நவம்பர், 2017

இரண்டு சிறுகதை - வாசிப்பு

இன்று வாசித்த இரண்டு சிறுகதையும் பள்ளிப்பருவ காலத்தை நினைவில் கிளர்த்திவிட்டது.

பிரைமரி காம்ளக்ஸ்
https://padhaakai.com/2017/08/27/primary-complex/

ஒரு சிறுவனின் நினைவோட்டத்தில் சொல்லப்படும் கதையேயானாலும் அதுமட்டும் போதுமா நினைவுகளுக்கு தலை சீவி விட. உடல்நிலை சரியில்லாமல் போனால் வீட்டில் கிடைக்கும் உபசரிப்பும் (பகலில் ரொட்டியும் பாலும் இரவில் தொட்டுக்க சீனியோடு இட்டிலியும்) மூன்று வேளை சோறுண்ணுவதிலிருந்து விடுதலையும், முட்டையின் மஞ்சள் கருவை சோற்றில் பிசைந்து சாப்பிடுவது வியாழக்கிழமை பள்ளியில் கிடைக்கும் முட்டை என நிகழ்வுகளை அசைபோட்டுக்கொண்டே வாசித்து முடித்தேன்.

இதோ எனது சரீரம்

இம்மாத தடம் இதழில் வெளி வந்திருக்கும் சிறுகதை.
ஓவியங்களையும் ஓவியரையும் புகலிடத்து அகதியையும் பற்றிய கதைதேயானாலும் அதில் வரும் இடைவார் என்ற சொல் இழுத்துப்போன தூரம் அகவயமானது. அவ்வார்த்தைக்குப்பின் "இடவாரக் காணோம், இடவார எங்கம்ம, இடவார எங்க வச்சேன்" என்று திரும்பத்திரும்ப எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன். அதிலிருந்து எவ்வளவு தொலைவு அந்நியப்பட்டுவிட்டேன் என எண்ணம் ஓடிக்கொண்டிருக்கிறது.