புதன், 4 ஜூலை, 2018

சுயவாசிப்பு

பெரும்பாலும் பயணங்கள் புத்தகத்துடனே தொடக்கம் கொள்கிறது, ஆனால் அறைக்குள் தொடர்ந்து நீளும் வாசிப்பைப் போல பயணத்தின் வாசிப்பு இருப்பதில்லை. புத்தகத்தை கையிலெடுக்கும் போது யாரோவொருவர் அலைபேசியில் கத்திக் கத்திப் பேசுவதைக் கடந்து வாசிப்பு வளர்கையில் இரண்டாவது வார்த்தையோ வரியோ கண்களை பேருந்தின் இரயிலின் சாளரத்தை நோக்கித் திருப்பும், முதல் வார்த்தையோ வரியோ அப்படி சில பொழுதுகளில் செய்வதுண்டு.

அதற்குப் பின் நினைவின் அடுக்கிலிருந்து பயணவேகத்தை துரத்திக்கொண்டு வார்த்தைகள் வந்து விழும், இதையெல்லாம் எழுதாமல் விடுகிறோமே என்றொரு ஏக்கம் சன்னலோரத்தில் சிலிர்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும் மனவோட்டம் எந்தத் தடையுமின்றி காட்டாறு மேல் பயணிக்கும் சருகு போலவோ நாய்க் குட்டி போலவோ வளைந்து நெளிந்த நீண்ட பாதையில் ஓடிக் கொண்டிருக்கும்.

வாசித்த அவ்வரிக்கு சிறிதும் தொடரபற்ற சிந்தனைகளை விரவி கேள்விளை பரப்பிச் செல்லும், சடாரெனத் தோன்றும் மலைகளும் காடுகளும் அப்பகுதியைச் சிதைத்து வேறொரு நினைவடுக்கினுள் சிக்குண்டு கிடக்கும் கதைகளை, கேள்விகளை பிணைத்து உருக்கொண்டுவரும். வாசிப்பையும் விஞ்சும் சுய வாசிப்பின் நேரமது.