வெள்ளி, 26 ஜனவரி, 2018

ஓவியக் கண்காட்சியில் சில நிமிடங்கள்

யாருமில்லாத அக்கூடம் அமைதியாகத்தான் இருந்திருக்க வேண்டும் அப்படியில்லை அங்கிருந்த உருவங்கள் உரையாடிக் கொண்டிருக்க அவ்வமைதி அவ்வோவியங்களுக்கு தேவையாக இருந்திருக்கலாம் ஆனால் அதில் உடன்பாடில்லாமல் மரத்தாலும் கண்ணாடியாலுமான கதவைத் தள்ளி உள் நுழைந்தோம், அவைகள் பேச்சை நிறுத்தி விட்டது போலவே புலப்பட்டது. அழகாக இருக்கும் யாருமற்ற நிலவெளி போலத்தான் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது, யாருமில்லாமல் எப்படி அழகாக இருக்க முடியும் அல்லது அப்படி இருப்பது போல் கூற இயலுமா, முடியாதுதான் அங்கே தோழிகளும் காதல் வயப்பட்டவரும் கனவுலகும் இறை நிலையும் ஓவியங்களாக இருந்தனர்.




தாமிர நிறத்தில் நீண்டு நெழிந்த டி.ஜோசப் ராஜ்-ன் திண்மமான கோடுகளுக்கிடையே ஒழுகிக் கொண்டிருந்த வண்ணங்கள் மிக அதிகமான மனித முகங்களையும் உருவங்களையும் பறவைகளையும் புலனாக்கிக் கொண்டிருந்தன. மனிதனுக்கு கலையை அணுக யதார்தத்தை கடந்த ஒரு வெளி தேவையாக உள்ளது அது குதிரை போன்ற குதிரையாகவும், உதடு போன்ற உதடாகவும் இருக்கிறது, ஆம் அவர்கள் பெண்கள் தான் ஆனால் அந்த முகங்களில் நாம் யாரை வேண்டுமானாலும் பொருத்திப் பார்க்கலாம், ஆம் அந்த மூன்று பெண்கள் (தோழிகள் ஓவியம்) இடத்தில் எனக்குள்ளிருந்தோரை என்னால் மனதுக்குள் வரைந்து பார்க்க்க முடிந்தது, என்ன அவ்வோவியத்தின் பெண்கள் மடியில் “பீடித்தட்டு” இல்லை நான் வரைந்து பார்த்த்தில் அதை சேர்த்துக் கொண்டேன்.

அந்தக் கோடுகளின் இடையிடையே தென்படும் உருவங்களை உள்வாங்க முயற்சித்து படுதோல்வி அடைந்தேன், இன்னும் அதிலிருந்து மீளவில்லை எனக்கு என் இரண்டு வயது மகள் பென்சிலால் சுவரில் வட்டம் வட்டமாக வரைந்துவிட்டு “மீனு மீனு” எனச் சொல்லி பூரிப்பதே நினைவில் வந்தது, ஓவியர் முனுசாமி அவர்களின் இக்கோடுகளில் முகங்கள், விலங்குகள் உண்டு யதார்தத்தை மீறி நீண்டு குறுங்கும் எளிய கோடுகள்.

கொற்றவையின் முகத்தையும் ஆயுதங்களையும் கடந்து சுற்றி வரையப்பட்டிருந்த வாசல் வடிவங்கள் மனதை உள்ளிளுத்துக் கொண்டிருந்தபோது என் மகள் என்னைப் பிடித்து இழுத்து மண்டியிட்டு வணங்க மழலைச் சொல் மொழிந்தாள் நான் சிரித்துவிட்டு அரவக்கோன் அவர்களின் அடுத்த ஓவியங்களுக்குள் நுழைந்தேன், சக்தி ஓவியமும் பின் மற்றொரு இறைவி அதிலும் வாசல் வடிவமைப்பு உண்டு அதனை வேறொரு திறப்புகளை உருவாக்கும் வழியாக உணர்ந்து கொள்ளலாம் என அப்பொழுதில் தற்காலிக முடிவொன்றை பெற்றுக்கொண்டு நகர்ந்தேன்.

சின்னஞ்சிறிய நுண் கோடுகள் கொண்டு வரையப்பட்ட இரு ஓவியங்கள் அனேகமாக அது இராமன் அவர்களுடையதாக இருக்க வேண்டும் அதற்குள் மறந்துவிட்டது. இவ்வகை ஓவியங்களை இதற்குமுன் இருமுறை காட்சியில் கண்டிருக்கிறேன் வெகு இலகுவான ஈர்க்கும் ஆற்றல் கொண்ட கோடுகள். சுந்தரமூர்த்தி அவர்களின் பேனா மற்றும் பென்சிலால் தீட்டப்பட்ட கோடுகள் சிக்கலான கோடுகளை கொண்ட தெளிவான உருவங்களை வெளிப்படுத்தும் கலை ஆம் அந்த மீன்கள் மிகு கவர்ச்சியாக இருந்தன. இடையில் ஒன்றிரண்டு பேர் வந்து போக இறுதியில் அவ்வோவியங்களை உரையாட விட்டுவிட்டு வெளியேறினோம் நானும் என் மகளும்.

செவ்வாய், 23 ஜனவரி, 2018

16 - வாசிப்பு

மிகக் கச்சிதமாகத் தொடங்கும் உரையாடல் ஒரு வேகத்துக்குள் நம்மை செலுத்திவிட்டு பின் காட்சியை உணர்த்துகின்ற கதையமைப்பு கடைசியில் ஒற்றை வரியிலோ வார்த்தையிலோ வாசிப்பவரை வெளியேற விடாமல் அக்கதைக்குள்ளே உழன்று வர வைக்கும் முடிவு, "ப்ச்" "பொம்மை" "சித்திரங்கள் ஆகிய கதைகளில் வாசகருக்கான வெளி இறுதி வார்த்தைகளில் தான் நீளத் தொடங்குகிறது. கதைச் சித்தரிப்பு இன்னும் வலுப்பட வேண்டும், ரகசியம் இருப்பதாய் என்ற இரண்டாம் தொகுப்புக் கதைகளை விட ரமேஷ் ரக்சனின் இம்முதல் தொகுப்பு சிறப்பு.

ஞாயிறு, 7 ஜனவரி, 2018

செம்மாரி - வாசிப்பு

ஆடுபுலி ஆட்டம் தான் கதையின் மையம் என்பதை அறிவித்தே தொடக்கம் கொள்கிறது இப்புதினம். முதல் பகுதி பத்தி எழுத்து நாவல் என வாசிக்கும் மனதில் அயர்ச்சியையும் தொடந்து வாசிக்கும் ஆர்வத்திற்கு தடை போடுவதாகவும் உள்ளது, ஆனால் தேசிகர் கதை சொல்லத் தொடங்கியதும் எழுத்து மாற்றம் கொள்வது கதைக்கான தொடர்ச்சி. பழந்தமிழ் நாடு பற்றிய அறிமுகம் நான்காம் தலைமுறை ஆட்சியில் தொடரும் கலைச் சிறப்புகள் என சலிக்காத சொல்லாடல்.

ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் கவனப்படுத்துவதில் அடுத்தடுத்த தலைப்புகளை பயன்படுத்தியிருக்கிறார் படைப்பாளி. சிற்பக்கலைக்காக வெட்டப்படும் மலைகள் அதற்காக உழைக்கும் தொழிலாளிகள் என சொல்லப்படும் விவரணைகளே அவர்களின் உழைப்பையையும் இன்று நாம் காணும் ஒரு சிற்பத்தின் பின்னாலிருக்கும் அடித்தட்டு மக்களின் பங்களிப்பையும் விவரணை செய்கிறது, வென்னீரையும் மரக்குச்சிகளையும் கொண்டு பாறையை பிளப்பதும் நிழலை வைத்து உயரத்தை அளப்பதும் சிற்பிகளால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, கற்கடிகாரம், கல்லில் இசைக்கருவி, நுண் கற்சிற்பங்கள் என பல ஆச்சரியங்கள். இவையெல்லாம்  அறிந்துகொள்ளும் புள்ளியாகக் கருதி தொடர்ந்து வாசிக்கலாம்.

கதையின் மையமான ஆட்டம் செம்மாரியின் காதல் களிப்புகளுக்கு பிறகு வேகம் எடுத்து பக்கங்களை புரள வைக்கிறது. விளையாட்டுக்குப் பின்னான சதி வலை கதையை வேறொரு திசையில் நகர்த்திச் செல்கிறது. அட!! ஆமால்ல எனும் ஆச்சரியமும் இருக்கிறது இடையிடையில். ஒட்டமும் நடையுமான வாழ்க்கையில் புதிய குணங்களை வெளிப்படுத்துகின்ற நாம் ஏற்கனவே அறிந்த கதாப்பாத்திரத்திற்கு அதற்கேற்ப சிறு அறிமுகத்தை போகிற போக்கில் சொல்லிச் செல்வது சிறப்பு.

செம்மாரியின் விளையாட்டு உத்தியை வாழ்வில் நேரும் இன்னலான தருணத்தில் தன்னையும் சார்ந்தோரையும் காத்துக்கொள்ள பயன்படுத்தி வாசிப்போருக்கு சாகச நிகழ்வின் சாத்தியங்களை அனுபவிக்கச் செய்திருப்பது படைப்பாளியின் திறன், அவ்வப்போது செம்மாரி என்ன சிந்திக்கிறான் என்பதை ஊகிக்க வழி கிடைக்கும் பொழுதில் அதை செய்து முடித்துவிடுகிறான்.

ஆடுபுலியாட்ட கட்டங்களை சித்தரிக்கும் காட்சியிலும் நகலன் அதை வரையும் காட்சியிலும் எங்கள் ஊரின் மைதானத்தில் இருந்த வேப்பமரத்தடி மண்டபம் (சோம்பேறி மண்டபம் என்றுதான் அழைப்பார்கள்) தான் நினைவில் வந்துவந்து போனது, அங்கு இவ்வாட்டம் நிகழ்வதுண்டு அதோடு நீச்சல்காரன் (http://tech.neechalkaran.com/2012/05/adu-puli.html?m=1) இணையதளத்திலுள்ள விளையாட்டை விளையாடிப் பார்த்ததும் நினைவில் ஆடியது.
இனி ஆடும் ஆடுபுலியாட்டமும் கண்டால் ஏன் புலியைக்கண்டாலும் செம்மாரியின் நினைவுதான் வரும். 

எழுத்துப்பிழைகளை தவிர்த்தும் நிலப்பரப்பு பற்றிய காட்சி சித்தரிப்பிலும் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம், வாழ்த்துகள்.