வியாழன், 23 ஏப்ரல், 2026

Book - Money Tales For Young Minds

It's interesting to know how the money was introduced and how the trade was made before an era when money was not there at all. People are always curious about knowing new things; likewise, when money comes to their village, rules come next, they are interested to use it and trade whatever they like. The story is narrated in the way of easy read, understandable. Each chapter increases eagerness to the next chapter.

I stuck for a while when reading the sentence "A sadness not born from lack, but from a system that made plenty feel like nothing."

The story tells us whenever a new rule comes, it makes difficulties for people. However, their innovative thinking creates some wonders like George did when the bank refused a loan for him.

Oh!! That's interesting—crowd funding and stock market introduced in an easy way. The rules are created when problems arrive and people worry about the market instability.

Old Amma gives us a lesson about wealth and life. I became a kid to receive her words.

A best start for anyone who wants to understand money, wealth, life obviously!!!

வேடனும் காகமும்

ஒரு ஊர்ல ஒரு வேடன் இருந்தானாம். வேட்டைக்குப் போய்விட்டு ஊருக்குள்ள வந்தானாம். ஊர்ல பறவைகளையே காங்கலையாம். ஊர் மக்கள்கிட்ட கேட்டானாம் "என்ன பறவைங்க எதையுமே காங்கல"ன்னு. 

மக்கள் எல்லாரும் சொன்னாங்களாம் "நீ தான் எல்லா காட்டுல உள்ள பறவைங்களையும் வேட்டையாடிட்ட, ஊர்ல உள்ள பறவைங்களையும் வேட்டையாடிடுவன்னு பயந்துகிட்டு எல்லா பறவையும் வெளியூருக்குப் போயிட்டு".

அதுக்கு வேடன் சொன்னானாம் "நான் தான் ஊர்ல உள்ள பறவைங்களை வேட்டையாட மாட்டேன்னு உங்களுக்குத் தெரியுமே"

சொல்லிட்டு அரச மரத்தடியில போயி படுத்துக் கிடந்தானாம். அப்போ மரத்துல காக்கா ஒண்ணு வந்து உக்காந்து கா...கா... ன்னு கூப்பிட்டுதாம். வேடன் அந்தக் காக்காவ "பக்கத்துல வா" அப்படின்னு கூப்பிட்டானாம். அதுவும் வந்ததாம்.

எங்க உன்னோட நண்பர்களைக் காணோம்னு கேட்டானாம்.

அவங்க எல்லாரும் உனக்குப் பயந்து வெளியூருக்குப் போயிட்டாங்கன்னு சொல்லிச்சாம் காகம்.

நீ மட்டும் ஏன் போகவில்லைன்னு கேட்டானாம் வேடன்.

ஊர்ல உள்ள பறவையைத்தான் நீ வேட்டையாட மாட்டியே அதான் துணிவா இங்கயே இருக்கேன். அப்படின்னு சொல்லிச்சாம் காகம்.

அப்போ வேடன் சொன்னானாம் உன்னோட நண்பர்கள் கிட்டையும் இதச் சொல்லியிருக்கலாம்லா என்றானாம்.

அதுக்கு காக்கா சொல்லிச்சாம் எல்லார் கிட்டையும் சொன்னேன் ஆனால் அவங்க யாருமே கேக்காம பறந்து போய்ட்டாங்க.

அப்படியா அப்போ உன்னோட நானும் வாரேன் அவங்களை இப்பவே கூட்டிட்டு வந்துருவோம்னு வேடன் சொன்னானாம்.

உன்னைய பார்த்தா அவங்க எல்லாரும் பயந்து இன்னும் தொலைவா போயிருவாங்க. அதனால நீ ஒரு கடிதம் எழுதித் தா அதைக் கொண்டு போய் காமிச்சி அவங்களை கூட்டிட்டு வாரேன்னு காகம் சொல்லிச்சாம்.

வேடனும் கடிதம் எழுதிக் கொடுத்தானாம் அதைக் கொண்டு போய் தன்னோட நண்பர்களை கூட்டிட்டு வந்ததாம் காகம்.

எல்லாப் பறவைகளையும் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சியா இருந்ததாம். இனிமே எந்தப் பறவையையும் வேட்டையாட மாட்டேன்னு பறவைங்ககிட்டையும் மக்கள்கிட்டையும் சொன்னானாம்.

ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

அக்கா குருவி 32

வானம் 
கடலைப் புணரும் 
ஒற்றைக் கோட்டில் 
மண் உரசும் விரலோடு
நடந்திட வேண்டும் 

கடலுக்கு 
காது கொடுக்க வேண்டும் 

செம்மஞ்சளும் 
வெள்ளையும் தழுவும் 
கரும்பச்சையை
பார்த்திருக்க வேண்டும்

சனி, 18 ஏப்ரல், 2026

அக்கா குருவி 31

 குப்பையில் கசியும் 

துத்தநாகத்தின் புன்னகை 

வெட்ட வெட்ட 

கை நீட்டும் 

மரம் 

செவ்வாய், 7 ஏப்ரல், 2026

படாம்

 தனியார் மற்றும் அரசு காட்சிக் கூடங்களில் நடைபெறும் கண்காட்சிகளில் படைப்பை அது வெளிப்பட்டிருக்கும் வடிவத்தை மட்டுமே கண்டு நமது பார்வை நகரும் பொழுதில் ஏற்படும் இன்பம் அயர்ச்சி கோபம் வெறுப்பு என ஒவ்வொரு உணர்வும் படைப்புக்கான முழுமையை நிரப்பிக் கொண்டே செல்லும்.

சென்னை கவின் கலைக் கல்லூரியில் "படாம்" என்ற தலைப்பில் ஆடை வடிவமைப்புத் துறை இறுதியாண்டு மாணவர்கள் அவர்களது படைப்புகளை வகைப்படுத்தியிருந்த விதம் அறிதலுக்கான ஆர்வத்தைத் தூண்டும் விதமாக இருந்தது. சாதாரண பார்வையாளனாக இந்தக் காட்சியை அணுகி அவை உருவாகி வந்த வழிமுறைகளை மாணவர்கள் விளக்கிக் கொண்டே வந்த போது எனக்குள் இருந்த மாணவன் விழித்துக்கொண்டு உற்சாகம் வெளிப்பட ஒவ்வொரு ஓவியத்திலும் ஆச்சரியத்துடன் கற்றுக்கொள்ளத் தொடங்கினான்.

இயற்கை வண்ணங்களைப் பயன்படுத்தி வரைந்த ஓவியங்களில் என்னை மறந்து அதிக நேரங்களை எடுத்து அதன் நிறம் உருவாக்குவது பற்றி மேலும் மேலும் உள்வாங்குகையில் அங்கிருந்து நகர இயலாமல் நகர்ந்து வந்தேன். சில ஆண்டுகளுக்கு முன் வண்ணம் தயாரிக்க பொறுக்கி வைத்த முருங்கைப் பசைகளை இனியேனும் கையிலெடுத்து நிறமிகளோடு விளையாட வேண்டுமென உள்ளம் குறுகுறுக்கிறது.



செவ்வாய், 31 மார்ச், 2026

வதம் செய்வோம் வேங்கைகளே


எழுத்துக்களை விட ஓவியங்களின் வழியே வாசிக்கும் பொழுதில் தான் காமிக்ஸ் மேலும் ஆர்வமுள்ளதாகவும் தேடலுக்கு உரியதாகவும் மாற்றம் கொள்கிறது. இது ஜப்பானில் ஒரு சிற்றரசருக்கு கீழ் உள்ள சாமுராய் பற்றிய கதை.

டெட்சுவோவின் பயணத்தில் காடுகளும் மலைகளும் சமவெளிகளும் கோடுகளாக பயணிப்பது என்னையும் காட்சிக்குள் இழுத்துக் கொண்டது. முழுக்க முழுக்க கோட்டோவிய முறையில் வரையப்பட்டிருக்கும் சித்திரங்கள் உண்மையிலேயே மிரட்டுகின்றன. ஒவ்வொரு சட்டகத்தையும் பொறுமையாக உள்வாங்க உள்ளே கற்பனைக் கோடுகள் கட்டியணைக்கின்றன.

செவ்வாய், 24 மார்ச், 2026

கோத்திரம்

சில சாலையோரத்திலும் முச்சந்திகளிலும் வெகுவாக குப்பைகள் கொட்டப்படும் இடங்களில் கடவுளாகக் கருதப்படும் அனைத்து மதத்தின் முகங்கள் அல்லது குறியீடுகள் அச்சடிக்கப்பட்ட பதாகையை கட்டியோ ஒட்டியோ வைத்திருப்பார்கள் கூடவே இங்கே குப்பை கொட்டாதீர் சிறுநீர் கழிக்காதீர் என்ற சொற்றொடர்களும் எழுதியிருக்கும். 

நேற்று குன்றத்தூரில் உள்ள அம்மன் கோவிலுக்குச் சென்றிருந்தோம். வாசலுக்கு அருகில் இருந்த பூ விற்கும் அம்மா அர்ச்சனைக்கும் வாங்கிக்கம்மா என்றார் ஒவ்வொரு சொல்லுக்கும் அடுத்து அவர் சேர்த்துச் சொன்ன அம்...மா.. அம்...மா மிகுந்த கனிவாகவும் நாடகத் தன்மையுடனும் இருந்தது. பூ நூறும்...மா அர்ச்சனை நூறும்...மா மொத்தம் எரணூறும்...மா.

கோயில் மண்டபத்தில் நுழையும் போது ஒரு காலை மடக்கி மற்றொன்றை தொங்கவிட்டிருந்தவர் படபடப்புடன் அர்ச்சனையா என்றார். இவர்தான் பூசாரி போல என்று நினைக்க நேரம் தராமல் சீட்டு ஒன்றைக் கிழித்து நீட்டினார் ஐந்து ரூபாய் என்று தெளிவற்று காதில் விழுந்தது. 

உள்ளே பூசாரி இல்லை அர்ச்சகர் நின்றிருந்தார். மண்டபத்தில் ஒரு அம்மா புதுமணப்பெண் போல தலையில் வாழைப்பட்டையில் கட்டிய பூச்சரம் அணிந்து வழிபாடு நடத்திக் கொண்டிருந்தாள். அர்ச்சகர் எங்களிடம் என்ன கோத்திரம் என்று கேட்டார் எங்கள் இருவருக்கும் தெரியவில்லை என்றோம் உடனே சுப கோத்திரம் என்று மந்திரத்தை அவிழ்த்து விட்டார். வெளியில் வந்ததும் மாறி மாறி கேட்டுக் கொண்டோம் அப்படி என்றால் என்னவென்று, எனக்கு திருமணத்திற்குப் பிறகு தான் எனது ராசி பற்றியே தெரியும் என்றேன். 

காலையில் பள்ளிக்குச் செல்லும் வழியில் பேருந்தில் எழுதியிருந்தது "ஓம் ஶ்ரீ சாய்" இந்த முன்னொட்டுகளில் இன்னும் என்னவெல்லாம் சேருமோ. ஆமாம் கோத்திரம் என்றால் என்ன. கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி நாளன்று இங்கே மணிகண்டன் நகரில் உள்ள கோவிலுக்குச் சென்றோம் அங்கிருந்த பூசாரி தமிழில் பாசுரங்கள் பாடியது இனிமையையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. இதற்கு முன்பு இப்படி ஓதுவார் ஓதிக் கேட்டதில்லை.

வியாழன், 19 மார்ச், 2026

அக்கா குருவி 30

கல் தேடும்
பயணத்தின் இடையில் 
பறந்து வந்ததை
விலக்கிய பின் 
தரை துளாவியதன்
சலிப்பில் 
விலக்கியதை ஓடிப்பிடித்து 
பையில் நிரப்பியதும் 
அலைச்சலின் மாலையில் 
தொடை கிழித்தது 

புதன், 18 மார்ச், 2026

அக்கா குருவி 29

ஓடும் கால்கள் 
குழந்தையை
கையில் ஏந்திய விரல்கள் 
ஈருருளியை
குடை சாய்க்கும் கைகள் 
இசை
பூட்டிய காதுகள் 
பறவை விரிக்கும் சிறகுகள்

சனி, 14 மார்ச், 2026

அக்கா குருவி 28

நீண்ட சாலை
நெடுந்தூரப் பயணி
வற்றிய நீர் குடுவை 
வெயில் 
காற்றைக் கடத்தும் மரம் 
நிழல் 

சனி, 28 பிப்ரவரி, 2026

அக்கா குருவி 27

யாரோ ஒருவர் 
தன் கை உயர்த்தி 
யாரோ ஒருவருக்கு அடையாளம் காட்ட
விரல் நோக்கிய 
திசையில்
அரச இலைகள்
கதையாடின

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

பட விளக்குகள்

அந்தப் பைஞ்சுதைச் சாலையில் சுண்ணாம்புக் கட்டியால் படம் வரைந்ததும். எங்கிருந்தோ வாங்கி வந்த நீள்வாக்கில் கிழிக்கப்பட்ட மூங்கில் மட்டைகளை வளைத்து வரைந்த படத்திற்கு ஏற்ற வகையில் கட்டுவார்கள் பின் அதன் மீது சின்னச் சின்ன இடைவெளியில் தொடர் விளக்குகளை பொருத்தி திருவிழாவிற்கு ஆயத்தமாவார்கள். ஆடி மாத விழாக்கள் மற்ற கோவில் விழாக்களில் இங்கே சென்னையில் ஆங்காங்கே இந்த வடிவமைப்புகளைக் கண்டாலும் கடந்த வாரம் மயானக் கொள்ளை விழாவிற்காக வைக்கப்பட்டிருந்தவற்றைக் பார்த்ததும் ஊரில் கிருஷ்ணா இசையகத்தில் இந்த வகை பட விளக்குகள் செய்வது நினைவில் ஓடியது.



புதன், 4 பிப்ரவரி, 2026

அக்கா குருவி 26

இலைகளுக்கு 
இடையிடையே வானம் 

வெயில் என்கிறது ஒரு குரல் 
வைட்டமின் டி என்கிறது மற்றொன்று 

ஒற்றைத் தாள் தேடுகிறது
கோடு

சனி, 31 ஜனவரி, 2026

நற்கீறல் - மணப்பாக்கம்




நற்கீறல் - பச்சைமலை

இயற்கையை ரசிக்கவோ அனுபவிக்கவோ கொண்டாடவோ வேண்டுமென்றால் அதனதன் போக்கில் வேடிக்கைப் பார்க்கலாம். அதே இயற்கையை உணர்வோடு உள்வாங்கவும் அதோடு கலந்து போகவும் அதனை ஓவியமாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று தோன்றுகிறது. அதிலுள்ள அசையும் தன்மையில் இன்றைய பொழுதையும் அசையாத வகைமையில் நேற்றையும் கோடுகளாக்கி அகம் மகிழ்வது நமக்கு உயிர் கொடுக்கும். ஒவ்வொருவரின் பார்வையும் வரையும் கோடுகளும் வேறு வேறு ஆனால் அடையும் உணர்வில் ஓவியத்துடன் ஒன்றிணைகிறோம்.

தாம்பரம் பச்சைமலையில் கடந்த வெள்ளிக்கிழமை நற்கீறல் நிகழ்வு நடைபெற்றது. நாங்கள் வரைந்து பழகினோம்.


சனி, 24 ஜனவரி, 2026

சாத்துக்குடி

தனித்துத் தொலைவிலிருந்து வருகையில் பேரூந்தோ ஈருருளியோ எதில் வந்தாலும் எங்கே சாப்பிடுவது என்ற நோக்கத்தில் உணவகத்தை நோட்டம் விட்டுக்கொண்டே வந்தால் வீடு வந்துவிடும். நண்பர்களோடு வெளியில் உணவருந்தும் போது இந்த கடையில் இதுதான் நல்லா இருக்கும் இதை இப்படி உண்டால் சுவையாக இருக்கும் என ஆணித்தரமாக சொல்வார்கள். எது சுவை என்றொரு கேள்வி எழும். எனக்குத் தெரிந்து உப்பு மற்றும் காரச்சுவை தவிர்த்து எதையும் சுவைக்க விடுவதில்லை நவீன உணவகங்கள்.

ஒருமுறை நண்பர் ஒருவர் அரத்தி (ஆப்பிள்) பழச்சாறு அருந்தினார் பக்கத்தில் இருந்தவர் விளையாட்டாக கொஞ்சம் கசப்பாக இருக்கிறது அல்லவா என்று கேட்டதும் ஆமாம் ஆமாம் என்று பரிமாறுபவரை அழைத்து சாற்றை மாற்றச் சொல்லி விட்டார். இவர் எதுவும் சொல்லாமல் இருந்திருந்தால் அவர் வெற்றுக் கோப்பையைத்தான் கீழே வைத்திருப்பார். இங்கே சுவை உணவில் இல்லாமல் இன்னொருவரின் கருத்துக்குள் புதைந்திருந்து வெளிப்பட்டுவிட்டது.

மும்பையில் தானா தொடர்வண்டி நிலையத்தில் இன் முள்ளங்கி (கேரட்) செங்கிழங்கு (பீட்ரூட்) சாறு எடுத்து இனிப்பு ஏதும் சேர்க்காமல் வாங்கிக் குடிக்கலாம். கண் முன்னே செய்து தருவார்கள். சில நாட்களாக அலுவலகம் செல்லும் ஆம்பிட் பூங்கா சாலையில் வட இந்தியர் நடத்தும் அப்படியொரு சாத்துக்குடி கடையில் ஒரு கோப்பை சாறு அருந்துவதும் அதன் தரமும் சுவையும் சிறப்பாக உள்ளது. இனி சுவை அறிய வேண்டும்.



ஞாயிறு, 18 ஜனவரி, 2026

நற்கீறல் - காஞ்சிபுரம் கோவில்

இந்த கிழமை நாங்கள் காஞ்சிபுரம் கோவில்களை வரைவதற்கு கிளம்பினோம்

வரதராச பெருமாள் கோவில் காட்சியை ஐந்து நிமிடத்தில் விரைவான கோடுகளால் வரைந்து பார்த்தேன்.


கோவிலின் முகப்பு கோபுரமும் தெப்பத்தின் நடுவிலுள்ள மண்டபமும்.



ஏகாம்பரநாதர் கோவில் நெடுங்கோபுரமும் அருகிலுள்ள சின்ன வீடும். நீரில்லா தெப்பத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து வரைந்தோம்.




புதன், 14 ஜனவரி, 2026

எத்தனை கோணம் எத்தனை பார்வை - ஓவியர் ஜெயகுமார்

தனது ஓவியப் பயணத்திற்கு எழுத்தாளர் ஜெயகாந்தனுடனான நட்பு எவ்வளவு உறுதுணையாக இருந்திருக்கிறது என்பதை ஓவியர் ஜெயகுமார் கட்டுரைகளில் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துவதிலிருந்தே உணர்ந்துகொள்ள முடிகிறது. இவரது கோட்டோவியம் பற்றிய திறனாய்வுக் கட்டுரையில் ஏன் இவர் வண்ணங்களுக்கு வருவதற்கு இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டார் என்பதை எண்ணிப் புழுங்கும் கவிஞர் ரவி சுப்பிரமணியின் சொற்களில் தேங்கி நின்று அவரது ஓவியங்களை வாசித்துப் பார்த்தேன். ஓவியங்களில் ஊடாக ஓடிக் களிக்கும் கோடுகள் தான் வடிவங்களையும் அதை நோக்கும் பாதைகளையும் உள்வாங்க உதவுகிறது வண்ணங்கள் குறியீட்டுத் தன்மையுடன் வேறொரு பரிமாணத்தை நமக்கு வழங்குகிறது. 

ஊர்வலம் சிறுகதையில் ஒரு உவமை "தனது மனைவியின் உடம்பிலிருந்து அவளது உயிரை தனியே பிரித்து அகழ்ந்தெடுத்து அதையே ஒளியாக பக்கத்தே வைத்தது போல் தோன்றியது அவருக்கு" இதை வாசிக்கையில் இவரது கவிதை மனம் பயணம் செய்து லயிக்கும் திசையில் நடந்து பார்ப்பது அழகாக இருந்தது. இரண்டொருமுறை வாசித்தப் பிறகு "தனியே பிரித்து...அதையே" என்ற சொற்கள் அவ்விடத்தில் தேவையில்லையோ என்று எனக்குத் தோன்றியது. 

ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் "அன்று பெய்த மழையில்" திரைப்படத்தில் கலை இயக்குனராக உடன் இணைந்து பணியாற்றும் போது சில்க் சுமிதாவின் தன்னை தீவிரமாக விரும்பும் குணத்தை வெளிப்படுத்துவற்காக நடிகையை நேரடியாக பார்த்து வரைந்து படத்தில் பயன்படுத்தியதை அறிந்துகொண்டதும் அப்படத்தை வலையொளியில் (YouTube) தேடிப் பார்த்தால் இப்படியொரு வயது வந்தோருக்கான படம் வந்திருப்பதை கொஞ்சம் வியப்புடன் கண்டு கண் நகர்ந்தது அந்த ஓவியத்திற்கான தருணத்தைப் பார்த்ததும் நிறுத்திக் கோடுகளில் கண் பதித்தேன் வண்ணங்கள் தெளிவாக இல்லாததால் அதிக கவனம் செலுத்த இயலவில்லை. 

ஓவியர் திரு.ஜெயகுமார் அவர்களை சந்திக்கும் ஒவ்வொரு பொழுதும் படைப்பு உருவாக்கம் பற்றிய அறிதலுக்கான வழியையும் உள்ளார்ந்த ஆற்றலையும் பெற்றுக் கொண்டேயிருப்போம். இப்போது அவரது "எத்தனை கோணம் - எத்தனை பார்வை" நூலை வாசிக்கும் போது கலை சார்ந்து அவருக்குள் விளைந்த வகைமைகளை எண்ணிப் பார்ப்பதும் அதனை மூலமாகக் கொண்டு கணக்கற்று விரியும் நமது புரிதல் படிநிலைகளும் பேரனுபவமாக உள்ளது. தனது கலை நுட்பங்களை வெளிப்படுத்த அவர் இன்னும் பல நூல்கள் படைக்க வேண்டும்.

வெள்ளி, 2 ஜனவரி, 2026

நற்கீறல் - கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்

 இன்று நற்கீறல் ஓவிய நிகழ்விற்காக கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தில் கூடி வரைந்தோம்.