சனி, 15 ஆகஸ்ட், 2026

நற்கீறல் - ஐம்பத்தி இரண்டு

நற்கீறல் ஐம்பத்தி இரண்டாவது வாரத்தை நேற்று சென்னை பாண்டி பசாரில் மனித முகம் வரையும் பயிற்சியுடன் நிறைவு செய்தோம். இந்த ஒராண்டுப் பயணத்தில் வெளிப்புறத்திற்கு சென்று வரைவதற்கு முக்கியத்துவம் கொடுத்ததன் மூலம்,  வேறுவேறு அளவிலான தூவல் கோட்டோவியங்களில் மரம், நிலப்பரப்பு, கோயில் எனத் தொடர்ந்து வரையும் பொழுதில் கற்றுக் கொண்டவை ஏராளம். ஒவ்வொரு இலையும் கிளையும் நிலமும் வரையும் கோடுகளும் வெவ்வேறு தன்மையுடையவை அவை கொடுத்த இன்பம் அதனினும் மேலானது.

திங்கள், 10 ஆகஸ்ட், 2026

சாவுச் சங்கு

"என்னப்பா ஒழுங்கா ஊத முடியுமா"

"இன்னும் பன்னெண்டு மணி ஆவலடே..முடியுமா"

"எங்க ஊர்ல மணியடிச்சா போதும்னுட்டாங்க"

"சங்கு ஊதும் போது ஒருத்தேன் அந்த எடத்துலயே குளோசு"

"தம் கெட்டணும்லா, முடியாது ப்பா, அடைச்சிக்கிடும்"

"இன்னும் ஒருதரம் ஊதேன்..ஆளுவ வந்து சேரணும்லா"

"இனும செல்லுல போட்டுக்கிட வேண்டியதாங்"

"அதுலாங் ஊதுத மாதி வராதுலா"

"மத்தியானம் நேரமா வந்துரு.. பெறவு நீ பாட்டுக்கு ஊத்திக்கிடாத"

"என்னெ இன்னைக்கி ஒண்ணும் அம்புடல போலுக்கு"

"அர அடிச்சிட்டுத்தான் நிப்பான், இல்லனா வேல நடக்குமாங்கும்"

ஏற்றமும் இறக்கமுமாக குரல்கள் ஏனோதானோவென்று வந்து கொண்டிருந்தது ப்ப்ப்ப்ப்ப்....... ப்ப்ப்ப்ப்ப்...........ப்ப்ப்ப 
ப்ப்ப்ப்ப்ப்....... ப்ப்ப்ப்ப்ப்...........ப்ப்ப்ப 
ப்ப்ப்ப்ப்ப்....... ப்ப்ப்ப்ப்ப்...........ப்ப்ப்ப 
என்ற சங்கொலிக்கு இடையிடையே.

ஒலிப்பு முடிந்ததும் தானொரு திரைப்படத்திற்காக சங்கு ஊதிய கதையை பிய்த்துப் பிய்த்து சாவு வேலைக்கிடையே சொல்லிக்கொண்டிருந்தார் முருகன்.

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

நற்கீறல் 50

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நாங்கள் நற்கீறல் நிகழ்விற்காக வெளிப்புறத்திற்குச் சென்று வரைந்து வருகிறோம். இந்த வாரம் வழக்கம் போல ஒரு இடத்திற்குச் சென்று வரைவதோடு நிறுத்திக் கொள்ளாமல் இந்த நிகழ்வை ஒரு பயணமாகவே மாற்ற நினைத்தோம். அதற்காகக் குன்றத்தூரில் இருந்து கிளம்பி திருப்பெரும்புதூர் சாலை வழியாக சோமங்கலம் அடைந்து, அங்கிருந்து படப்பை நோக்கி செல்லும் வழியெங்கும்‌ கிராமங்களில் உள்ள வீடுகள், கோயில்கள், நிலப்பரப்பு, மரங்கள், குளங்கள், மாடுகள் என அனைத்தையும் பார்த்து வரைந்து பழகினோம்.

 இவை அனைத்தையும் ஒரே நாளில் எப்படி வரைந்து முடித்துவிட்டு வர முடியும் என்று வினா எழலாம். ஆனால் ஒரு படம் வரைவதற்கு ஒரு நிமிடத்திற்கு மேல் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று நாங்கள்  முடிவு செய்தோம்.  ஒரு நிமிடத்திற்குள் எந்த அளவுக்கு வேகத்துடன் கோடுகளைக் கீறுகிறோம் என்பதில் கவனம் குவித்தோம். இந்த கோட்டோவியங்கள் எல்லாம்  என்னுடைய எளிய கிறுக்கல்கள். இவை முழுமையடையாமல் இருக்கலாம், ஆனால் இக்கோடுகளின் வீச்சும் எங்களது மனநிலையும் உணர்வோடு ஒன்றிப் போன நொடிகள் அடுத்த பயணத்திற்கான உந்துதலை தந்திருக்கின்றது.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

அந்த vibe

ஒருநாள் நாங்கள் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள இஸ்கான் கோவிலுக்கு மதியம் மூன்று மணிக்குச் சென்று படியேறினோம். மாலை நான்கு மணிக்குத்தான் நடை திறப்பார்கள் என்று சடைமுடியுடன் இருந்த கிருஷ்ண பக்தர் ஆங்கிலத்தில் "4' O clock" என்று சொல்லி விட்டு அவரது துணிப் பைக்குகள் எதையோ துழாவினார். வெளியில் வந்து அங்கிருந்த வேப்பமரத்தின் அடியில் அமர்ந்து உரையாடினோம். "இந்த இடம் "vibe" ஆக இருக்கிறது" என்றார் எங்களில் ஒருவர். உடனிருந்தவர்களில் இருவர் ஆமாம் என்பது போன்றே தலையசைத்தனர். எனக்குப் பொதுவாக பிடித்தது பிடிக்காதது பற்றி யாராவது கேள்வி எழுப்பினால் மனம் ஒருவித குழப்பத்தில் ஆழ்ந்துவிடும். அத்தாடு இப்படி ஒருவர் தன் மனதிற்கு பிடித்த இடமாக இருப்பதை மேற்சொன்ன சொல்லால் உணர்த்த முன்வருகிறார் என்றதும் திக்கென்றிருந்தது.

மற்றொரு நாள் வேறொரு இடத்தில் நாங்கள் கூடுகையில் (எந்த இடத்தில் என இப்போது நினைவில் இல்லை ஆனால் இதுவும் ஒரு கோவில்)  அவரே சொல்கிறார் " இஸ்கானுக்குப் பிறகு இந்த இடம் தான் 'vibe' ஆக இருக்கிறது" என்று. வரையும் கோடுகளைத் தவிர்த்து அங்கும் இங்கும் எந்தப் புறக்காரணியும் எனது அகத்தைத் தீண்டவில்லை. உண்மையில் புறக் காரணங்களால் நம் அகம் தூண்டப்படுமா என்றால் ஆமாம் என்றே சொல்லலாம். அங்கே எல்.ஆர்.ஈஸ்வரி பாடல் ஒலித்திருந்தால் கொஞ்சம் தலையும் கை காலும் உதறல் எடுத்திருக்கும். அந்த 'vibe'.

ஞாயிறு, 26 ஜூலை, 2026

செயற்கை நுண்ணறிவின் பிழைகள்

சிலபல கடைகளின் முகப்புகள் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி உருவாக்கிய விளம்பரப் படங்களால் நிரம்பியிருக்கிறது. அனைத்துத் துறையினரும் தங்களது தேவைக்காக இந்த வழிமுறையைப் பின்பற்ற தொடங்கிவிட்டனர் செய்தி பத்திரிக்கைத் துறை உட்பட. இணைய வழி பத்திரிக்கை அல்லது பத்திரிக்கை போல் நடிப்பவர்களை விட்டுவிடலாம். உண்மைகளை உரக்கச் சொல்வோம் என முழங்கி வீட்டுக்கு வீடு வந்துசேரும் செய்தித்தாள்கள் இந்த வகை படங்களை பயன்படுத்தும் போது கவனிக்கத் தவறும் பிழைகளை எப்படி ஏற்றுக் கொள்வது. எழுத்துப்பிழை திருத்துநர் போல் செயற்கை நுண்ணறிவு படங்களின் பிழைகளையும் திருத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். உதாரணப்படம் கீழே. தமிழ்நாட்டு அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும்..

சனி, 18 ஜூலை, 2026

வாசிப்பின் இடையிடையே

சில ஆண்டுகளுக்கு முன்பு "பாகீரதியின் மதியம்" என்ற‌ புனைவு நூலை வாசிக்கும் பொழுதில் தான் ஓவியர் ஆதிமூலம் பற்றியும் அவரது காந்தி ஓவியங்கள், மிதக்கும் வண்ணங்கள் போன்ற படைப்புகளையும் பற்றி அறிந்து அவ்வோவியங்களைத் தேடுகையில் கோட்டோவியங்களில் காந்தியின் உருவங்களையும் ஆங்கிலேய இந்தியாவின் அரசர்கள் ஓவியங்களில் முகம் இழந்து உடை, நகை போன்ற அணிகலன்களை மட்டுமே சுமந்த உருவப்படங்களைக் கண்டு ஏன் இப்படி வரையப்பட்டிருக்கிறது என்ற ஐயத்தில் உலாவந்தபோது அவர்களின் அடிமைத்தனத்தை காட்சிப்படுத்தவே இத்தகைய வடிவமைப்பைக் கையாண்டிருக்கிறார் என்று தெரிந்தது. எப்படி தெரிந்தது என்பது நினைவில் இல்லை. சில நாட்கள் முன்னதாக ஓவியர் சந்ரூ கூறிய கருத்தில் கூட இந்த வகை படைப்புகளுக்கு ஓவியர்கள் கொடுக்கும் விளக்கங்களை நக்கலடித்திருப்பார். இப்போது காந்தியின் சுயசரிதை வாசிப்பினிடையே மூன்றாவது பாகத்திலுள்ள பதினாறாவது அத்தியாயத்தில் மகாராசாக்கள் பெண்களைப் போல ஆடை அலங்காரங்களை வெறுப்புடன் தங்களுக்கு விருப்பம் இல்லாமலே அணிந்து தர்பாருக்கு வருவதும் அதனை அடிமைத்தனத்தின் குறியீடாக அவர்கள் எண்ணுவதையும் பதிவு செய்திருக்கிறார். ஓவியர் ஆதிமூலம் அவரது மகாராசாக்கள் ஓவியத்திற்கான மூலச் சிந்தனையை காந்தியிடம் இருந்தே பெற்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.


                                                     *

ஒளிப்பதிவு பற்றி அறியக்கூடிய அரிய தகவல்களையும் நுட்பங்களையும் எளிய மொழியில் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ் இந்துவில் சி.ஜே ராஜ்குமார் எழுதி வரும் தொடரில் இன்று ஒப்பனையும் ஒளிப்பதிவும் எவ்விடத்தில் இணைந்து சிறப்புற பணியாற்றி சிறந்த படைப்புகளை உருவாக்க இயலும் என்பதற்குரிய நுட்பங்களை விவரித்திருப்பது தொடர்ந்த தேடலுக்கு உரமூட்டுவதாக இருக்கிறது எப்படி ஓவியத்தில் ஒளிநிழல் பிரித்து படைப்பை உண்மை நிலைக்கு நெருக்கமாக உருக்கொண்டு வருகிறோமோ அதே போலவே ஒளிப்பதிவிலும் ஒளியின் தன்மை மற்றும் ஒப்பனையின் தன்மை இரண்டும் இணைந்து எவ்வகையில் திரைக்கதைக்கு உயிரோட்டம் கொடுக்கிறது என்பது கலைகள் ஒன்றுக்கொன்று பிணைந்து வாழ்வை காட்சிப்படுத்தும் அழகியல். ஓவியம் பற்றிய தேடலுக்கும் இந்த வாசிப்பு உந்துதலை ஏற்படுத்துகிறது.

செவ்வாய், 7 ஜூலை, 2026

அக்கா குருவி 33

ஒரு படுக்கைக் கோடு
அதன் மையத்திலிருந்து செங்குத்தாக
ஒன்று 
இதன் மையத்தில் 
வலப்புறமிருந்தொரு படுக்கை 
படுக்கையின் வலது ஓரம் 
செவ்வகம் 
(செவ்வகம் என்றால் சதுரம் எனக் கொள்க)
இடது ஓரத்திலிருந்து 
கீழ் நோக்கி செங்குத்தாகவும் 
அதன் அடிப்பகுதியையும் 
முதலில் கிழித்த 
செங்குத்தின் அடிப்பகுதியையும்
கட்டிப்போடும் படுக்கைக் கோடு
வரைந்து பார்ப்போம் 



புதன், 24 ஜூன், 2026

அண்ணா நூற்றாண்டு நூலகம் யாருக்கானது

சில மாதங்களுக்கு முன் ஒருநாள் காலை நேரம் அலுவலகக் கூடலுக்காகக் கிளம்பினேன் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் கடந்துதான் மைலாப்பூர் செல்ல வேண்டும் என்பதால் சில ஓவியப் பக்கங்களை புரட்டலாம் என்று படியேறினேன். இருக்க இடம் இல்லாத அளவு மனிதத் தலைகள் எங்கும் பரவியிருந்தது "என்னடாயிது நுண்கலை பற்றி வாசிக்க இவ்வளவு பேரு இருக்காங்களா" என்று என்னை நானே கேட்டுக் கொண்டு ஒரு ஓரமாக தரையில் அமர்ந்து கோட்டோவியங்களில் ஆழ்ந்தேன்.

கடந்த சனிக்கிழமை Cybersecurity பற்றி வாசிக்க வேண்டுமென மூன்றாவது தளத்திற்குச் சென்றேன். அங்கங்கே இருக்கைகள் மீதம் இருந்தது. இரண்டு புத்தகங்களை எடுத்துக் கொண்டு அமர்ந்தேன் எதிரே இருந்த இருவர் மடிக்கணினியும் குறிப்பேடுகளும் வைத்து படிப்பது போல் இருந்தது. வலது பக்கத்தில் இருந்த இருக்கைகளில் ஒரு ஆணும் பெண்ணும் வந்து சிறு சலசலப்போடு அமர்ந்தார்கள். குறிப்பேட்டில் எழுதி இருப்பதை வைத்துக் கொண்டு மெல்லிய அந்தரங்கக் குரலில் அந்த ஆண் பெண்ணுக்கு ஏதோ பாடம் சொல்லிக் கொடுக்கிறான். (கொடுக்கிறான் என்று எழுதினால் கொடுக்கிறார் என்று தானாக சரிசெய்கிறது தட்டச்சு). பெரும்பான்மையானவர்கள் எவரும் அங்கிருந்த புத்தகங்களை எடுத்து வாசிப்பவர்களாகத் தெரியவில்லை. யாருக்கானது நூலகம் என்ற கேள்வி ஒலித்துக் கொண்டே இருந்தது.

ஞாயிறு, 14 ஜூன், 2026

வழியில்

ஏரி மீன் சாப்பிட்டு நாட்கள் ஓடிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணி இருந்தால் பக்கத்தில் இருக்கும் கடையில் ஆட்டுக் கறி வாங்கி வீட்டில் சமைப்பது வழக்கம். விடுமுறை என்றால் மனம் தொலைவு நாடும் குறிப்பாக மீன். நேற்று எண்ணத்தில் அசைவம் பற்றிக் கொண்டதும் "சிலேபி" மீனின் உருவம் கோடுகளாக உருண்டு திரண்டது. 

செம்பரம்பாக்கம் ஏரி அருகில் உள்ள சந்தையில் விறால், கட்லாகெண்ட, சிலேபி, வவ்வால் ஆகியவைதான் பெரும்பாலும் கிடைக்கும். மூன்று கிலோ சிலேபி வாங்கிவிட்டு திரும்பிவரும் போது வாத்துக்கறி கடை அருகே கண்ணாடிக்குள் கண்கள் மட்டும் தெரியும்படி துணி கட்டியப் பெண்மணி கை நீட்டினாள் ஏனோ பச்சைக்கிளி முத்துச்சரம் ஜோதிகா அம்மையார் உளக்காட்சியில் வந்து போனாள். 

வெளிவட்டச்சாலையைக் கடந்து குன்றத்தூர் பாதையில் வரும் போது "பெயர் என்ன" என்றாள் 

"பாண்டியன். நீங்க எங்க இறங்கணும்"

"பல்லாவரம் போகணும் குன்றத்தூர் பஸ்டாண்ல எறங்கணும், மாசத்துக்கு ஒருமுறை இங்கவந்து மீன் வேங்கிட்டு போவேன், மத்திமீன் வேணும்னா காசிமேட்டுக்கு போயிருவேன். ஐஸ்ல வச்ச மீன் சாப்புட முடியாது. இதுன்னா மசாலா தக்காளி எல்லாம் போட்டு மண்பானைல கொழம்பு வச்சிட்டம்னா நாலு நாளைக்குச் சாப்புடலாம் ஒண்ணும் ஆவாது அதனால 66 புடிச்சி இங்கவந்துட்டு 86D புடிச்சி சந்தைல எறங்கிருவேன். உங்கள மாதிரி யாராவது வந்தா உதவி கேப்பேன். சின்னப் பசங்க யாரும் நிக்க மாட்டாங்கா, அதுவுமில்லாம அவங்க போற வேகத்துக்கு. இல்லனா ஆட்டோவுக்கு பத்து ரூபாய் குடுத்து வந்துருவேன்"

இடையிடையே நான் தலையசைத்துக் கொண்டிருந்தேன்.

"நான் மணிகண்டன் நகர் போறேன் அங்க எறக்கிவிடட்டுமா"

"அது எங்கயிருக்கு"

"பல்லாவரம் போற வழிலதான்"

"உங்களுக்கு தொந்தரவு இல்லன்னா அங்கேயே எறக்கிவிடுங்க"

"மத்தி மீன் காசிமேட்டுல எவ்வளவுக்கு தாராங்க"

"அது ஒவ்வொரு நாளும் மாறும், அங்க கூறுதான் வப்பாங்க கிலோக் கணக்கு கெடையாது. செல நேரம் கூறு எரணூறு அம்மாவாச நாள்னா நெறைய பேரு வேங்கமாட்டாங்க அதனால மூணு கூறு எரணூறுன்னு கெடைக்கும்."

இவங்களை 66 பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விடலாமா வேண்டாமா என்று நினைக்கையில் அந்நிறுத்தத்தை கடந்து கொண்டிருந்தோம்.

"உங்க பேர ஏன் கேட்டேன்னு தெரியுமா"

தலையை புரியாதது போல ஆட்டினேன்.

"காலைல அப்புறம் சாய்ங்காலம் ப்ரேயர் பண்ணுவேன் அந்த நாள்ல உதவி செய்தவங்களுக்கு எல்லாம் சேர்த்து அதனாலதான் பேர் கேட்டேன். இத நான் சின்னப்புள்ளயில இருந்து செய்யிறேன்"

அவங்க சாய்ங்காலம்னு சொன்னாங்களா இல்ல ஈவ்னிங்னு சொன்னாங்களான்னு இப்போ குழப்பமாக இருக்கிறது.

ஓ அப்படியா நல்லது நல்லது என்று சொல்லலாமா என எண்ணும் போதே இவங்களை மேத்தா நகரில் இறக்கிவிடலாம் என முடிவு செய்துவிட்டேன்.


வியாழன், 11 ஜூன், 2026

வாசிப்பினிடையே

கலை என்பது கலைத்து வைப்பதன் சுருங்கியச் சொல் வடிவாக இருக்கலாம் என்றே அடிக்கடி எண்ணத்தில் ஓடுகிறது. இந்தச் சொல்லின் வேர் அல்லது பெயர் காரணம் என்ன என்றொரு அகத் தேடல். 

க்+அலை என இச்சொல்லை பிரிக்கலாமா அதற்கு இலக்கணம் இடம் தருமா என்று தெரியவில்லை ஆனால்  அலை என்பது அலைந்து கொண்டே இருப்பதன் சுருக்கமா அப்படியென்றால் கடல் அலை எப்போதும் இங்கும் அங்கும் அலைந்து அலைந்து திரிவதால் ஒருவேளை அதற்கு அலை என்று பெயர் வந்திருக்குமோ. இருக்கட்டும்.

க் என்ற ஒலிப்புக்கு ஏதேனும் பொருள் இருக்குமா உயிர் பெற்ற எழுத்துக்குத்தானே பொருள் உருவாக முடியும். நான் நினைப்பது சரிதானா. அலையும் மனம் கலைக்கானதாக பொருந்தி கலை என்ற சொல்லாகவும் உருமாறியிருக்குமோ. தெரியவில்லை செத்தேங் கொழப்பமாத்தாயிருக்கு.

                          ‌      ‌*  *  *
காந்தியின் சத்திய சோதனை வாங்கி சில ஆண்டுகள் இருக்கும். அப்போது தொடங்கி சில பக்கங்களுக்கு மேல் தொடர‌ ஆர்வமில்லாமல் வைத்துவிட்டு இந்த கோடையில் மீண்டும் முயன்று தொடர்கிறது வாசிப்பு. தன்னைப் பற்றிய நிலைப்பாடுகளை அப்பட்டமாக பல இடங்களில் முன்வைக்கும் காந்தியின் எழுத்துப் பிடித்திருக்கிறது. பயத்துடன் கூடிய தனது போராட்ட குணத்தை லண்டனிலும் தென்ஆப்பிரிக்காவிலும் வெளிப்படுத்துபவர் ஒவ்வொரு நிகழ்விலிருந்தும் அவரது நிலைப்பாடுகளை மதிப்பீடு செய்து அடுத்தடுத்து பயணிப்பதில் அவரது தேடலின் பிடிமானம் உணரப்படுகிறது. தனக்கு நேரமில்லாத காரணத்தால் கற்க இயலாத தென்மாநில மொழியைப் பேசும் மக்கள் தான் பேசும் மொழியைக் கற்றுக் கொண்டு தன்னோடு உரையாட வேண்டும் என நினைக்கும் இடத்தில் இருந்து இன்றும் தொடரும் இந்தித் திணிப்பின் அடி வேரைப் புரிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும் தனது பயணத்தின் இடையே தமிழ் கற்கும் வாசிப்பை மேற்கொள்கிறார். மீண்டும் தென் ஆப்பிரிக்காவில் என்ன வகையிலான போராட்டம் தொடரும் என்று எதிர்நோக்குகிறேன்.

                        ‌        ‌* * *

வெள்ளி, 29 மே, 2026

வரைவும் செயற்கை நுண்ணறிவும்

சின்னச் சின்ன படங்களில் ஒரு கதை சொன்னால் எப்படி இருக்குமென நினைத்து சிறு சிறு கட்டங்களில் வரைந்து பார்த்தது முதல் படம். 

இந்த படங்களைக் கொண்டு செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி மீள் உருவாக்கம் செய்தால் எப்படி வரும் என எண்ணியதன் விளைவு இரண்டாவது படம். கதை பற்றிய எந்த விளக்கமும் அளிக்காததால் அதனுடைய புரிதலிலேயே கதையோட்டத்தை தீர்மானித்து முடிந்திருக்கிறது.


வியாழன், 23 ஏப்ரல், 2026

Book - Money Tales For Young Minds

It's interesting to know how the money was introduced and how the trade was made before an era when money was not there at all. People are always curious about knowing new things; likewise, when money comes to their village, rules come next, they are interested to use it and trade whatever they like. The story is narrated in the way of easy read, understandable. Each chapter increases eagerness to the next chapter.

I stuck for a while when reading the sentence "A sadness not born from lack, but from a system that made plenty feel like nothing."

The story tells us whenever a new rule comes, it makes difficulties for people. However, their innovative thinking creates some wonders like George did when the bank refused a loan for him.

Oh!! That's interesting—crowd funding and stock market introduced in an easy way. The rules are created when problems arrive and people worry about the market instability.

Old Amma gives us a lesson about wealth and life. I became a kid to receive her words.

A best start for anyone who wants to understand money, wealth, life obviously!!!

வேடனும் காகமும்

ஒரு ஊர்ல ஒரு வேடன் இருந்தானாம். வேட்டைக்குப் போய்விட்டு ஊருக்குள்ள வந்தானாம். ஊர்ல பறவைகளையே காங்கலையாம். ஊர் மக்கள்கிட்ட கேட்டானாம் "என்ன பறவைங்க எதையுமே காங்கல"ன்னு. 

மக்கள் எல்லாரும் சொன்னாங்களாம் "நீ தான் எல்லா காட்டுல உள்ள பறவைங்களையும் வேட்டையாடிட்ட, ஊர்ல உள்ள பறவைங்களையும் வேட்டையாடிடுவன்னு பயந்துகிட்டு எல்லா பறவையும் வெளியூருக்குப் போயிட்டு".

அதுக்கு வேடன் சொன்னானாம் "நான் தான் ஊர்ல உள்ள பறவைங்களை வேட்டையாட மாட்டேன்னு உங்களுக்குத் தெரியுமே"

சொல்லிட்டு அரச மரத்தடியில போயி படுத்துக் கிடந்தானாம். அப்போ மரத்துல காக்கா ஒண்ணு வந்து உக்காந்து கா...கா... ன்னு கூப்பிட்டுதாம். வேடன் அந்தக் காக்காவ "பக்கத்துல வா" அப்படின்னு கூப்பிட்டானாம். அதுவும் வந்ததாம்.

எங்க உன்னோட நண்பர்களைக் காணோம்னு கேட்டானாம்.

அவங்க எல்லாரும் உனக்குப் பயந்து வெளியூருக்குப் போயிட்டாங்கன்னு சொல்லிச்சாம் காகம்.

நீ மட்டும் ஏன் போகவில்லைன்னு கேட்டானாம் வேடன்.

ஊர்ல உள்ள பறவையைத்தான் நீ வேட்டையாட மாட்டியே அதான் துணிவா இங்கயே இருக்கேன். அப்படின்னு சொல்லிச்சாம் காகம்.

அப்போ வேடன் சொன்னானாம் உன்னோட நண்பர்கள் கிட்டையும் இதச் சொல்லியிருக்கலாம்லா என்றானாம்.

அதுக்கு காக்கா சொல்லிச்சாம் எல்லார் கிட்டையும் சொன்னேன் ஆனால் அவங்க யாருமே கேக்காம பறந்து போய்ட்டாங்க.

அப்படியா அப்போ உன்னோட நானும் வாரேன் அவங்களை இப்பவே கூட்டிட்டு வந்துருவோம்னு வேடன் சொன்னானாம்.

உன்னைய பார்த்தா அவங்க எல்லாரும் பயந்து இன்னும் தொலைவா போயிருவாங்க. அதனால நீ ஒரு கடிதம் எழுதித் தா அதைக் கொண்டு போய் காமிச்சி அவங்களை கூட்டிட்டு வாரேன்னு காகம் சொல்லிச்சாம்.

வேடனும் கடிதம் எழுதிக் கொடுத்தானாம் அதைக் கொண்டு போய் தன்னோட நண்பர்களை கூட்டிட்டு வந்ததாம் காகம்.

எல்லாப் பறவைகளையும் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சியா இருந்ததாம். இனிமே எந்தப் பறவையையும் வேட்டையாட மாட்டேன்னு பறவைங்ககிட்டையும் மக்கள்கிட்டையும் சொன்னானாம்.

ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

அக்கா குருவி 32

வானம் 
கடலைப் புணரும் 
ஒற்றைக் கோட்டில் 
மண் உரசும் விரலோடு
நடந்திட வேண்டும் 

கடலுக்கு 
காது கொடுக்க வேண்டும் 

செம்மஞ்சளும் 
வெள்ளையும் தழுவும் 
கரும்பச்சையை
பார்த்திருக்க வேண்டும்

சனி, 18 ஏப்ரல், 2026

அக்கா குருவி 31

 குப்பையில் கசியும் 

துத்தநாகத்தின் புன்னகை 

வெட்ட வெட்ட 

கை நீட்டும் 

மரம் 

செவ்வாய், 7 ஏப்ரல், 2026

படாம்

 தனியார் மற்றும் அரசு காட்சிக் கூடங்களில் நடைபெறும் கண்காட்சிகளில் படைப்பை அது வெளிப்பட்டிருக்கும் வடிவத்தை மட்டுமே கண்டு நமது பார்வை நகரும் பொழுதில் ஏற்படும் இன்பம் அயர்ச்சி கோபம் வெறுப்பு என ஒவ்வொரு உணர்வும் படைப்புக்கான முழுமையை நிரப்பிக் கொண்டே செல்லும்.

சென்னை கவின் கலைக் கல்லூரியில் "படாம்" என்ற தலைப்பில் ஆடை வடிவமைப்புத் துறை இறுதியாண்டு மாணவர்கள் அவர்களது படைப்புகளை வகைப்படுத்தியிருந்த விதம் அறிதலுக்கான ஆர்வத்தைத் தூண்டும் விதமாக இருந்தது. சாதாரண பார்வையாளனாக இந்தக் காட்சியை அணுகி அவை உருவாகி வந்த வழிமுறைகளை மாணவர்கள் விளக்கிக் கொண்டே வந்த போது எனக்குள் இருந்த மாணவன் விழித்துக்கொண்டு உற்சாகம் வெளிப்பட ஒவ்வொரு ஓவியத்திலும் ஆச்சரியத்துடன் கற்றுக்கொள்ளத் தொடங்கினான்.

இயற்கை வண்ணங்களைப் பயன்படுத்தி வரைந்த ஓவியங்களில் என்னை மறந்து அதிக நேரங்களை எடுத்து அதன் நிறம் உருவாக்குவது பற்றி மேலும் மேலும் உள்வாங்குகையில் அங்கிருந்து நகர இயலாமல் நகர்ந்து வந்தேன். சில ஆண்டுகளுக்கு முன் வண்ணம் தயாரிக்க பொறுக்கி வைத்த முருங்கைப் பசைகளை இனியேனும் கையிலெடுத்து நிறமிகளோடு விளையாட வேண்டுமென உள்ளம் குறுகுறுக்கிறது.



செவ்வாய், 31 மார்ச், 2026

வதம் செய்வோம் வேங்கைகளே


எழுத்துக்களை விட ஓவியங்களின் வழியே வாசிக்கும் பொழுதில் தான் காமிக்ஸ் மேலும் ஆர்வமுள்ளதாகவும் தேடலுக்கு உரியதாகவும் மாற்றம் கொள்கிறது. இது ஜப்பானில் ஒரு சிற்றரசருக்கு கீழ் உள்ள சாமுராய் பற்றிய கதை.

டெட்சுவோவின் பயணத்தில் காடுகளும் மலைகளும் சமவெளிகளும் கோடுகளாக பயணிப்பது என்னையும் காட்சிக்குள் இழுத்துக் கொண்டது. முழுக்க முழுக்க கோட்டோவிய முறையில் வரையப்பட்டிருக்கும் சித்திரங்கள் உண்மையிலேயே மிரட்டுகின்றன. ஒவ்வொரு சட்டகத்தையும் பொறுமையாக உள்வாங்க உள்ளே கற்பனைக் கோடுகள் கட்டியணைக்கின்றன.

செவ்வாய், 24 மார்ச், 2026

கோத்திரம்

சில சாலையோரத்திலும் முச்சந்திகளிலும் வெகுவாக குப்பைகள் கொட்டப்படும் இடங்களில் கடவுளாகக் கருதப்படும் அனைத்து மதத்தின் முகங்கள் அல்லது குறியீடுகள் அச்சடிக்கப்பட்ட பதாகையை கட்டியோ ஒட்டியோ வைத்திருப்பார்கள் கூடவே இங்கே குப்பை கொட்டாதீர் சிறுநீர் கழிக்காதீர் என்ற சொற்றொடர்களும் எழுதியிருக்கும். 

நேற்று குன்றத்தூரில் உள்ள அம்மன் கோவிலுக்குச் சென்றிருந்தோம். வாசலுக்கு அருகில் இருந்த பூ விற்கும் அம்மா அர்ச்சனைக்கும் வாங்கிக்கம்மா என்றார் ஒவ்வொரு சொல்லுக்கும் அடுத்து அவர் சேர்த்துச் சொன்ன அம்...மா.. அம்...மா மிகுந்த கனிவாகவும் நாடகத் தன்மையுடனும் இருந்தது. பூ நூறும்...மா அர்ச்சனை நூறும்...மா மொத்தம் எரணூறும்...மா.

கோயில் மண்டபத்தில் நுழையும் போது ஒரு காலை மடக்கி மற்றொன்றை தொங்கவிட்டிருந்தவர் படபடப்புடன் அர்ச்சனையா என்றார். இவர்தான் பூசாரி போல என்று நினைக்க நேரம் தராமல் சீட்டு ஒன்றைக் கிழித்து நீட்டினார் ஐந்து ரூபாய் என்று தெளிவற்று காதில் விழுந்தது. 

உள்ளே பூசாரி இல்லை அர்ச்சகர் நின்றிருந்தார். மண்டபத்தில் ஒரு அம்மா புதுமணப்பெண் போல தலையில் வாழைப்பட்டையில் கட்டிய பூச்சரம் அணிந்து வழிபாடு நடத்திக் கொண்டிருந்தாள். அர்ச்சகர் எங்களிடம் என்ன கோத்திரம் என்று கேட்டார் எங்கள் இருவருக்கும் தெரியவில்லை என்றோம் உடனே சுப கோத்திரம் என்று மந்திரத்தை அவிழ்த்து விட்டார். வெளியில் வந்ததும் மாறி மாறி கேட்டுக் கொண்டோம் அப்படி என்றால் என்னவென்று, எனக்கு திருமணத்திற்குப் பிறகு தான் எனது ராசி பற்றியே தெரியும் என்றேன். 

காலையில் பள்ளிக்குச் செல்லும் வழியில் பேருந்தில் எழுதியிருந்தது "ஓம் ஶ்ரீ சாய்" இந்த முன்னொட்டுகளில் இன்னும் என்னவெல்லாம் சேருமோ. ஆமாம் கோத்திரம் என்றால் என்ன. கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி நாளன்று இங்கே மணிகண்டன் நகரில் உள்ள கோவிலுக்குச் சென்றோம் அங்கிருந்த பூசாரி தமிழில் பாசுரங்கள் பாடியது இனிமையையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. இதற்கு முன்பு இப்படி ஓதுவார் ஓதிக் கேட்டதில்லை.

வியாழன், 19 மார்ச், 2026

அக்கா குருவி 30

கல் தேடும்
பயணத்தின் இடையில் 
பறந்து வந்ததை
விலக்கிய பின் 
தரை துளாவியதன்
சலிப்பில் 
விலக்கியதை ஓடிப்பிடித்து 
பையில் நிரப்பியதும் 
அலைச்சலின் மாலையில் 
தொடை கிழித்தது 

புதன், 18 மார்ச், 2026

அக்கா குருவி 29

ஓடும் கால்கள் 
குழந்தையை
கையில் ஏந்திய விரல்கள் 
ஈருருளியை
குடை சாய்க்கும் கைகள் 
இசை
பூட்டிய காதுகள் 
பறவை விரிக்கும் சிறகுகள்

சனி, 14 மார்ச், 2026

அக்கா குருவி 28

நீண்ட சாலை
நெடுந்தூரப் பயணி
வற்றிய நீர் குடுவை 
வெயில் 
காற்றைக் கடத்தும் மரம் 
நிழல் 

சனி, 28 பிப்ரவரி, 2026

அக்கா குருவி 27

யாரோ ஒருவர் 
தன் கை உயர்த்தி 
யாரோ ஒருவருக்கு அடையாளம் காட்ட
விரல் நோக்கிய 
திசையில்
அரச இலைகள்
கதையாடின

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

பட விளக்குகள்

அந்தப் பைஞ்சுதைச் சாலையில் சுண்ணாம்புக் கட்டியால் படம் வரைந்ததும். எங்கிருந்தோ வாங்கி வந்த நீள்வாக்கில் கிழிக்கப்பட்ட மூங்கில் மட்டைகளை வளைத்து வரைந்த படத்திற்கு ஏற்ற வகையில் கட்டுவார்கள் பின் அதன் மீது சின்னச் சின்ன இடைவெளியில் தொடர் விளக்குகளை பொருத்தி திருவிழாவிற்கு ஆயத்தமாவார்கள். ஆடி மாத விழாக்கள் மற்ற கோவில் விழாக்களில் இங்கே சென்னையில் ஆங்காங்கே இந்த வடிவமைப்புகளைக் கண்டாலும் கடந்த வாரம் மயானக் கொள்ளை விழாவிற்காக வைக்கப்பட்டிருந்தவற்றைக் பார்த்ததும் ஊரில் கிருஷ்ணா இசையகத்தில் இந்த வகை பட விளக்குகள் செய்வது நினைவில் ஓடியது.



புதன், 4 பிப்ரவரி, 2026

அக்கா குருவி 26

இலைகளுக்கு 
இடையிடையே வானம் 

வெயில் என்கிறது ஒரு குரல் 
வைட்டமின் டி என்கிறது மற்றொன்று 

ஒற்றைத் தாள் தேடுகிறது
கோடு

சனி, 31 ஜனவரி, 2026

நற்கீறல் - மணப்பாக்கம்




நற்கீறல் - பச்சைமலை

இயற்கையை ரசிக்கவோ அனுபவிக்கவோ கொண்டாடவோ வேண்டுமென்றால் அதனதன் போக்கில் வேடிக்கைப் பார்க்கலாம். அதே இயற்கையை உணர்வோடு உள்வாங்கவும் அதோடு கலந்து போகவும் அதனை ஓவியமாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று தோன்றுகிறது. அதிலுள்ள அசையும் தன்மையில் இன்றைய பொழுதையும் அசையாத வகைமையில் நேற்றையும் கோடுகளாக்கி அகம் மகிழ்வது நமக்கு உயிர் கொடுக்கும். ஒவ்வொருவரின் பார்வையும் வரையும் கோடுகளும் வேறு வேறு ஆனால் அடையும் உணர்வில் ஓவியத்துடன் ஒன்றிணைகிறோம்.

தாம்பரம் பச்சைமலையில் கடந்த வெள்ளிக்கிழமை நற்கீறல் நிகழ்வு நடைபெற்றது. நாங்கள் வரைந்து பழகினோம்.