சனி, 12 டிசம்பர், 2020

ஓவியம் பழகுதல்

ஒரு கணக்காக சொல்ல வேண்டுமானால் கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ந்து இல்லையென்றாலும் அவ்வப்போது ஓவியம் வரைதலுக்கான பயிற்சியை செய்கிறேன், இதில் ஏற்பட்ட ஆர்வமும் உந்துதலும் இன்றுவரை அதிகரித்தே வருகிறது அடுத்து என்ன என்ற கேள்விகள் பல இருந்தாலும் ஓர் மனப் பயிற்சியாக இதைச் செய்து வருவது நிம்மதியை விளைவிக்கிறது. 
 
எப்படி இந்த வலைத்தளம் தொடங்கும் பொழுதில் வாசிப்பே இல்லாமல் வார்த்தைகளை மடக்கி மடக்கி எழுதினேனோ அதேப் போலத்தான் வரைதலுக்கான முயற்சியின் இடையில் ஓவியம் பார்த்தலை ஓர் பழக்கமாகவோ விருப்பமாகவோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை, பின் நாட்களில் வாசிப்பால் உருவான ரசனை போல, கடந்த ஒரு வருடத்தில் பலரது ஓவியங்களை பார்ப்பதையும் உணந்து கொள்வதையும் அதிகப் படுத்தினேன் இது வரைதலுக்கு பெருந்துணையாக உள்ளது, ஒரு படைப்பை ரசிகனாகவும் சக படைப்பாளியாகவும் உணர்வதற்கு இடையில் நிச்சயமாக வேறுபாடு இருக்குமென நம்புகிறேன்.

பார்க்கின்ற பொருளையோ ஆளையோ அப்படியே சித்திரமாக தீட்டி விடுவதில் சுகமிருந்தாலும் கோடுகளின் வளைவு சுழிவுகளை உணர்ந்து பொருளின் வடிவத்தை தன் கைவிரலிடுக்கிலுள்ள பென்சில் கோடுகளாக்குவதையும் அதிலுள்ள ஒயிலையும் கண்டு இன்புறுவதே கலையின் தன்மை எனக் கொள்ளலாம். இதற்கு அடிப்படையான வடிவங்களைப் பற்றி கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம் அதற்கான பாதையை உருவாக்கிக் கொண்டு மெல்லப் பயணித்தாலே கைகூடிவிடும் சித்திரங்களும் கலை அனுபவங்களும், ஓவியம் பார்த்தலை பற்றியும் நிறைய பேசலாம்.

கருத்துகள் இல்லை: