திங்கள், 27 ஜனவரி, 2020

ஞாயிரோவியம்

சரவணன் சித்திரக்காரன் ஒருங்கிணைக்கும் ஞாயிரோவியம் குழு சந்திக்கத் தொடங்கி ஒருசில மாதங்களாகிவிட்டாலும் நேற்றுதான் காலம் வசப்பட்டது எனக்கு, அவர்களுடன் குழுமியிருக்க. அண்ணா நகர் கோபுர (டவர்) பூங்காவில் நிகழும் இச்சந்திப்பில் சிறப்பு அழைப்பாளராக ஓவியர் ஜே.கே வந்தமர்ந்து கலந்துரையாடினார்.

கலை சார்ந்து எத்தனையோ துறை இருக்க ஓவியங்களை உருவாக்கி அகமகிழ்ந்து கிடப்போருக்கான தளமாக இக்குழுச் செயல்பாடு தொடர ஏதுவான சிறப்பான கருத்துகளை ஜேகே வழங்கினார். ஒரு நாளைக்கு ஐம்பதுக்கும் குறையாமல் ஓவியங்களாக வரைந்து வருபவர் அடுக்கி வைத்த காகிதங்களெல்லாம் கலைப்பொருளாகி காட்சியளித்தது. இது அவரது தொடக்க காலம் முதல் தான் பழக்கிக் கொண்டதாகச் சொல்லும் திறன் வேறு எவரும் கொண்டிருப்பாரா எனத் தெரியவில்லை. நேற்று மட்டும் அச்சில மணிநேரத்தில் வரைந்து காண்பித்தவை அதிகம். 

வரையும் பரப்பின் வெளியை எப்படி தன் கட்டுக்குள் வைத்து முழு பரப்பையும் தனக்கானதாக மாற்றிக் கண் காணாததை கைகொண்டு கோடுகளால் அழகாக்கும் நுணுக்கத்தை அவர் பகிர்ந்ததும் எனக்குள் ஓர் திறப்பை அடைந்த உணர்வு. என்ன வரைகிறோம் எனத் தெரியாமல், தொடங்கி வரையும் பொழுது கிடைக்கும் பேரானந்தமே கலையாகிறது என்ற அவரது சொல்லிற்கு மறுப்பில்லை, கலை என்பது வெளிப்படுத்துவது அல்ல உணர்வது எனும் நோக்கில் புரிந்து கொண்டு முன்னகர்வோம்.

இங்கு எனக்குள் ஒரு கேள்வி எழுகிறது, உணர்வது மட்டுமே கலையென்றால் வரையாமல் எழுதாமல் பேசாமல் ஒரு படைப்பை எண்ணியெண்ணி இருப்பதும் கலையா, தேடுவோம்.

ஓவிய நிகழ்விவை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்யும் சித்திரக்காரன் அண்ணனுக்கு வாழ்த்துகள்.

கருத்துகள் இல்லை: