சனி, 15 பிப்ரவரி, 2020

இரயில் பயணத்தில்

எந்தவொரு பயணத்திலும் புத்தகமும், ஓவியம் வரையும் புத்தகமும் இன்றி பயணம் சாத்தியமாவதில்லை. வரைகிறோமா வாசிக்கிறோமா என்பதையெல்லாம் வெறும் கேள்வியாக சுருக்கிவிட்டு பயணித்தால் நிச்சயம் ஒரு தருணம் அமையும் வாசிக்கவோ வரையவோ.

கடந்த டிசம்பரில் ஊர் சென்ற போது முன்பதிவு செய்த படுக்கைகள் உறுதி ஆகவில்லை, ஆர்.ஏ.சி-ல் நின்றுவிட்டது எங்களை படுக்க விடாமல், தென்காசியில் இறங்கும் இருவரில் ஒருவர், குழந்தைகளைக் கண்டதும் அவரது படுக்கையை விட்டுத்தந்தார். சன்னலோரம் கீழ் படுக்கையில் அவளும் இயலும் தூங்க, நானும் ரத்திகாவும் மேலே நிலை கொண்டோம். விளக்குகள் எங்கள் பகுதியில் அணைபட்டாலும், அருகில் ஒளிர்ந்தது வரையும் வாய்ப்பை உருவாக்கித் தந்தது.






கல்லூரி மாணவர்களாக இருந்திருக்கக்கூடும், பேச்சும் விளையாட்டுமாக விளக்கை அணையாமல் பார்த்துக் கொண்டார்கள், அவர்களில் ஒருவனை வரையத் தொடங்கினேன். பக்கவாட்டில் மேல் படுக்கையில் அமர்ந்திருந்த, எங்களுக்கு இடம் கொடுத்தவர் எட்டி எட்டிப் பார்த்தார். அவரையும் வரைந்தேன், ரத்திகாவும் சில கோடுகளை கிறுக்கினாள். புத்தகத்தை பார்க்கக் கேட்டார், கொடுத்துவிட்டு அந்த பெட்டி முழுவதும் நோட்டமிட்டேன், நான் கோடுகளாக்கவே வந்தவர்கள் போல சிலர் நின்று கொண்டிருந்தனர். பின் சில நொடிகளில் விளக்கு துயிலடைந்தது.


சனவரி 26 அன்று ஞாயிரோவியம் குழுவோடு என்னை இணைத்துக் கொண்டேன். அண்ணா நகர் கோபுர பூங்காவில் ஒன்று கூடி வரைந்து கலையினை தேடிக் கண்டடையும் ஓர் வினோத விளையாட்டு. ஓவியர் ஜெயக்குமார் அன்றைய நாளை சிறப்பு செய்தார் அவரது கலை பற்றிய உரையாடலை சிறு குறிப்பாக முன்னரே எழுதியிருந்தேன்.

கடந்த ஞாயிரன்று கொஞ்சம் சீக்கிரமாக சென்று விட்டதால், தனியாக அமர்ந்து மரத்தினையும் அதனருகிலிருந்த ஒருவரையும் வரைந்து கொண்டிருந்தேன், ராஜேஷ் என்றொரு நண்பர் வந்தமர்ந்து கலை பற்றி உரையாடவும். பின் சில நேரத்தில் சரவணனும், வருணும் வந்து சேர்ந்தனர். தொடர்ச்சியாக பிற ஓவியர்களும் வந்தமரவும், ஓவியர் முனுசாமி அவர்களும் கலந்து கொண்டு உரையாடினார்கள். சிலருக்கு வெறுப்புண்டு, வரைவதற்காக ஒன்று கூடினால், தொடர் பேச்சுகள் அதை உருவாக்கத்தானே செய்யும்.

1 கருத்து:

ஸ்ரீராம். சொன்னது…

ஓவியங்கள் சிறப்பு.  இரண்டாவது படத்தில் இடம்பெற்றிருக்கும் மாணவர் முருகன் போல இருக்கிறார்!