வியாழன், 14 மே, 2020

சங்கச் சித்திரங்கள் - வாசிப்பனுபவம்

வெகுநாட்களாகவே சங்க இலக்கியங்களை அதன் சுவையறிந்து வாசிப்பின்பம் அடைய வேண்டுமென்ற எண்ணமிருந்தது, நேரடியாகப் பொருள் புரிந்து விளங்கிக் கொள்வதைக் காட்டிலும் ஓர் அனுபவத்தின் வழி கவிதையின் இன்பத்தை அடைவது பேரின்பம். தயக்கத்துடனே "சங்கச் சித்திரங்கள்" புத்தகத்தை கையிலெடுத்தேன், மாலைப்பொழுதின் தாபத்தை ஓர் அழகான காலையில் வாசிக்கையில் தொடர்ந்து வாசிக்கும் உந்துதலை அளித்தது.

முதல் நான்கு கவிதைகளை வீட்டின் அறையிலமர்ந்து வாசித்தேன் சொல்களுக்கான விளக்கங்களை அறிவதும் புரிந்துகொள்வதுமாக வாசிப்பினிடையே சோர்வும் வந்து கதவைத் தட்டியது, நேற்று மச்சிப்படியின் அருகே நின்ற பொழுதில் உணர்ந்த குளிர்வு வாசிப்புக்கான இடமல்லவா இது என உணர்த்தியது, எப்போதும் உடற்பயிற்சிக்காக மச்சிக்கு வரும்போது உடன் தூவலும்(பேனா) ஓவியத்துக்கான ஏட்டையும் எடுத்து வருவதுண்டு, இன்று அதற்கு மாற்றாக சங்கச் சித்தரங்கள் கொண்டு வந்தேன். இருபது நிமிட கை கால் உதறலுக்குப் பின் வாசிப்பிற்காக படியில் அமர்ந்தேன். 

தென்னைமரம் போன்ற ஆனால் அதுவல்லாத பூக்கவும் காய்க்கவும் பார்த்திராத மரம் வரிசையாக நாங்கள் வசிக்கும் வீட்டிற்கு பின்னுள்ள ஓர் நிறுவனத்தின் சுற்றுச்சுவரருகே நிற்கிறது, காற்றில் அதன் கிளைகள் அசைவதால் கொஞ்சம் அனல் மறந்து அமரலாம், கனடாவின் அல்கான்க் காட்டினை பற்றி வாசிக்கும் போது சரசரவென்ற ஓசை கேட்டு மரத்தை நோக்கினேன், அணிலொன்று ஓலைகளுக்கிடையை நகர்ந்து வந்து நுனியில் நின்றுகொண்டு மச்சியை பார்த்துக்கொண்டே காலை உதறியது தாவுவதற்காக தவிப்பது போலத் தோன்றியது, என்னை அதுவரை கவனிக்காதது, சுற்றும் முற்றும் தலை திருப்பிய போது என்னைக் கண்டுகொண்டது "அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்" என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தோம்.
சில நாள் முன் கண்ட காணொளியில் அணிலொன்று சுவரிலிருந்து தாவி ஒருவரின் தோள் மீது பரவி அமரும் காட்சி நினைவில் வந்ததும் சில நொடி கழித்து மெல்ல கையை உயர்த்தி அழைப்பது போல் பாவனை செய்யும் முன் திசை திரும்பிச் சென்றது.




கருத்துகள் இல்லை: