சனி, 23 மே, 2020

கோபுரம் - விமலாதித்த மாமல்லன்

குருட்டு ஓவியனைப் பற்றிய சிறுகதை, வாசித்து முடித்ததும் யதார்த்தம் தொலைந்த கதையாகப்பட்டது ஆமாம் யதார்த்தத்தில் என்ன இருக்கிறது என கதையை உள்ளுக்குள் ஓட விட்டால், இதுவொரு கலைத் திருட்டு பற்றியதான கதையோ என்றும் கலை மதிப்பு என்ற கோணத்திலுமான கதையாகவும் புரிந்துகொண்ட பின். 

கண்களற்ற அவனின் கைகள் செய்யும் வித்தை ஆழ்மனத்தின் துடிப்பாக அங்கே மாயம் நிகழ வழி ஏற்படுகிறது, அந்த சிற்றூருக்கு இவன் செல்வதும் அங்குள்ள கோவில் கோபுரத்தின் எதிர்கால நிகழ்வை சித்திரமாக்கி அதற்காக அடி உதை வாங்கும் எளிய கலைஞன், இங்கு எளிய என்ற சொல்லை பயன்படுத்தவே கூச்சமாக உள்ளது, அவனது உருவகத்தை எழுதியிருக்கும் விதம் எளிமைக்கு எவ்விதத்திலும் சமமானதில்லை, மாறாக அதனினும் கீழ்மையானது. ஆனால் இவனது உள்ளம் கலையைத் தவிர தன் ஆழ்மனம் தவிர்த்த எதையும் துச்சமாக எண்ணுபவையானதா, வரைந்த அவனது கரிக்கோடுகளின் மீது வீசியெறியப்படும் காசுகளை தேவையற்றவையாகவே எண்ணி விலகிப்போகிறான், மக்களிடம் கலை பற்றிய எண்ணவோட்டம் கிஞ்சித்தும் இல்லாதது போலவே இவனுக்கும் அவர்களின் மதிப்பான பொருட்கள் மீது பற்றில்லை.

பிளவுபட்ட கோபுரத்தை வரைந்ததும் அதை அழித்துச் சென்ற கால்களிலிருந்து அவனது கரித்துண்டின் சாயம் விலக மறுக்கிறது, கதைக்குள் இதுவொரு படிமமாக பலமானதாக ஒட்டிக் கொள்கிறது, மக்கள் அவனையும் அவனது கலையையும் சிந்தனையையும் புறந்தள்ள எத்தனித்தாலும் அது விலகிவிடுவதில்லை அவர்களின் மனத்திலிருந்து, கதை முடிக்கப்படும் இடமும் இதைத் தெளிவாக நிகழ்த்துகிறது.

கோபுரத்தில் மாற்றலுக்குள்ளான சிற்பமொன்று வெளிநாட்டில்  கோட்டோவியமாகி ஏராளமான விலைக்கு விற்பனையாகிறது, இந்த ஓவியம் உருவானது எதன் விளைவு என எண்ணினால், கோபுரம் தரையில் ஓவியமாக விரிந்தபோது அதனை தங்களது ஒளிப்படக் கருவியில் நகலெடுத்த வெளிநாட்டுப் பயணிகள் முன் நிற்கிறார்கள். இந்த இடத்தில் கலைத் திருட்டிற்கான சாத்தியமிருக்குமோ எனத் தோன்றுகிறது. இருந்தும் கலைஞனை காப்பாற்றும் இடத்தில் இவர்களின் கெஞ்சலும் உடல் மொழியும் மேற்சொன்ன திருட்டு விளைவை மறுத்தாலும் அது நிகழ வேறுபல வழிகள் இருப்பதாகத்தான் புலப்படுகிறது. 

இந்த கதையின் கூறுகளை யாரேனும் எழுதியிருக்கிறார்களா எனத் தேடிய போது, எம்.எஃப். உசேனை மதவாதிகள் துரத்தியதை அடியொற்றி எழுதியதாக ஒருவர்  குறித்துள்ளார்.

ஒரு ஓவியனைப் பற்றிய கதை என்பதாலோ என்னவோ கதையின் போக்குக்குள் இயல்பாக நுழைந்துவிட்ட மனம் பார்வையற்றவன் எப்படி வரைகிறான் என்றும் உழன்றது, பார்வையுள்ளவனை விட இவர்கள் நுட்பமானவர்கள் என எண்ணும் பொழுது கதையின் மாயம் மெல்ல விலகப் பார்த்தாலும் விலகுவதில்லை.

2 கருத்துகள்:

Kasthuri Rengan சொன்னது…

தரமான பதிவு

Pandiaraj Jebarathinam சொன்னது…

மிக்க நன்றி