திங்கள், 17 பிப்ரவரி, 2025
அந்த முகம்
கண்ணை கசக்கி என்னைப் பார்ப்பதை தவிர்க்க முகத்தை அங்குமிங்கும் அசைத்த சின்னஞ்சிறு குழந்தையை படம் வரைவதற்கு எதிரே தனியாக அமர வைப்பது கடினம் மேலும் முகம் வரைவதற்கு ஏற்ற கோணமாக பார்வை அமையாது என்பதனால் பெற்றோர் மடியில் வைத்துக் கொள்ளவது சரியாக இருக்குமென்று "மடியில வச்சிக்கிடுங்க" என்ற பின்னும் அவள் கண் கசக்கும் நாடகம் தொடர்ந்தது. உடனே அவளது தந்தை எனக்குப் பின்னால் நின்று திறன் பேசியில் காணொளி (அனேகமாக யூ ட்யூப்) ஒளிப்பித்தார், அவளது கை அடங்கிவிட்டது இரு கண்களும் ஒளியை பிரதிபலித்தது. உள்ளே அனல் பரவவும் வரைய முடியாது எனக் கூறிவிடலாம் என மனம் போனாலும் கோடுகள் வெறிகொண்டு கீறலுக்குள்ளானது. இப்படியொன்று மீண்டும் நிகழும் எனில் அடுத்த முறையேனும் சொல்லிவிட வேண்டும்.
செவ்வாய், 11 பிப்ரவரி, 2025
குன்றத்தூர் முருகா
அப்பனே முருகா
என்னடா
உன் சாலையிலும் படியிலும்
தலைகள்
கண்டேன் இல்லை கால்களை
ஓரம் வழிகண்டு
தார்ச் சாலையில் குன்றேறினேன்
அவசர ஊர்தியிரண்டு கண்டேன்
நீயும் கண்டிருப்பாய் என்றெண்ணி
கடந்து வந்தேன்
உன்
திருமேனி காண
வழியில் அடி தேய
நெருக்குகிறது உடல்கள்
நீயும் கண்டிருப்பாய் என்றெண்ணி
விலகி
பின்புறம் சென்றேன்
சமோசாக்களுக்கும் போண்டாக்களுக்கும்
மயில் றெக்கைகளுக்கும்
இடையில்
வேண்டுதல் பொங்கலும்
புளிச்சோறும் நிறை கைகள்
தெப்பம் காண மனம் கொள்ளாமல்
நகர்ந்த பொழுதில்
மகள் அடுக்கிய கல்வீட்டை
நீயும் கண்டிருப்பாய் என்றெண்ணி
தீபத்தின் புகை கடந்து
உன் அண்ணனைக் கண்டோம்
அவன் ஏன் வெளியில் இருக்கிறான்
என்ற மகளின் வில்லங்க வினாவிற்கு
நேற்று விடையளித்த நினைவோடு
திருநீறு கொண்டு படியிறங்கினேன்
முட்டிக்காலில் படியேறிய பெண்ணையும்
உதட்டுச்சாயத்தைத் தழுவி வந்த
அரோகராக்களையும்
வியர்வை வேடிக்கைப் பார்ப்பதை
நீயும் கண்டிருப்பாய் என்றெண்ணி
விடைபெறுகிறேன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)