வியாழன், 16 ஜனவரி, 2025

அக்கா குருவி 14

தற்காலிக 
மணல் மேட்டு
புழுதி போல

காக்கையின் 
அலகு கவ்விய 
சிறகு போல்

தனித்திருக்கும் 
நாயின் 
வால் போல


காற்றில் 
இருக்க வேண்டும் 
நான்

வெள்ளி, 3 ஜனவரி, 2025

நிலமும் உயிர்களும் - வாசிப்பு

திரு. ஆத்மா கே ரவி எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் நூல் "நிலமும் உயிர்களும்". இது சிறுவர்களுக்கான மிகச் சிறிய நூல் மிக எளிமையான சொற்களில் குழந்தைகள் காடுகளைப் பற்றியும் காட்டு விலங்குகளைப் பற்றியும் அறிந்து கொள்ள ஏதுவான புத்தகம். இதிலிருந்து தனக்கு விருப்பப்பட்டதை தேடி இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள உதவும் நல்லதொரு அறிமுகப் புத்தகமாக இருக்கிறது, குழந்தைகள் மட்டுமல்ல காடுகளையும் உயிர்களையும் நிலங்களையும் புரிந்துகொள்ள விரும்பும் எவருக்கும் உரிய ஆரம்ப நிலை கையடக்கப் புத்தகம். 

இயற்கை ஒவ்வொரு உயிருக்கும் சமநிலையோடு வாழ எப்படி வழி வகுத்திருக்கிறது ஒரு எலியும் பன்றியும் எறும்புகளும் தனக்குத் தேவையான இருப்பிடத்தைத் தானே உருவாக்கிக் கொண்டு எவ்வாறு உயிர் வாழ்கின்றன, பறவைகள் வலசை புரிவதன் காரணங்கள் என ஆச்சரியமூட்டும் உயிரினங்கள் பற்றிய தகவல்கள் மற்றும் காட்டுப் பயணத்தின் போது விலங்குகளின் நடமாட்டத்தை அறிந்து கொள்ளும் அடிப்படை முறைகள் போன்றவற்றை மிகக் எளிமையான சொற்களில் விளக்கியிருக்கிறார்.