திங்கள், 29 ஏப்ரல், 2024

பிசிறு சிறுகதை வாசிப்பு

கதைகள் வாசிக்கத் தொடங்கிய நாட்களில் எழுதுவதற்கான எண்ணவோட்டங்கள் அதிகமாக ஆர்ப்பரிக்கும் என்னென்னவோ நினைவுகள் வந்து நெஞ்சில் வட்டமடித்துப் போட்டியிடும் ஆனால் எழுதுவதற்கு அமர்ந்தால் சில வரிகளுக்குள் வலிந்து திணிக்கத் தொடங்குவது போலத் தோன்றும்.

இதற்கு முன் எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சிறுகதைத் தொகுப்பினை முழுமையாக வாசித்திருந்தாலும் இன்று பிசிறு கதையை வாசிக்கையில் புதிதாக வாசிப்பது போன்ற எண்ண மாயம். 

மேற்சொன்ன கதைக்கான எண்ணவோட்டங்களில் ஒன்று பாடல் பற்றிய உரையாடல்கள். அப்பாவின் கடையில் மாலை நேரத்தில் வியாபாரிகள் கூடும் போது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் பற்றி பேசிப்பேசி நீளும் சொற்கள் அதை இசையமைத்தவர் படத்தின் பெயர் வெளிவந்த ஆண்டு எனத் தொடங்கி மற்றொரு வரியைச் சொல்லி அடுத்த பாடலுக்குத் தாவுவார்கள். யப்பப்பா என்றுச் சொல்லி நாக்கு பல்லில் அழுந்த க்க...க்க..ஒலியெழுப்பி கையையும் காலில் ஒரு தட்டுத் தட்டிக் கொள்வார் ஏ.என் மாமா..

பிசிறு கதை அந்த ஓட்டத்தில் இருந்தது இன்பத்தை ஏந்தியது மனதில்..

கதையிலிருந்து:
"ஆனையறுகுப் புதர்களின் ஓரம் எருமைகள் உருண்டு புரண்டு வெயிலுக்கு இதமாக சேற்றுப் பூச்சுமானம் செய்து கொண்டிருந்தன" என்று கதையின் தொடக்கத்தில் எழுதியிருக்கிறார். ஆனையறுகு எனக்குப் புதிதாக இருந்தது தேடிப் பார்த்தால் அறுகம்புல்லில் பலவகையிருப்பதையும் அறுகம்புல் தேடியலைந்த நாளொன்றும் நினைவில் தவழ்ந்தது.

அப்புறம் "ஆணியைப் பற்றுக்குறடால் பிடுங்கி விட்டு, மறுபடி குருத்தில் படாமல் அறைந்து மறுபக்கம் மடக்கினார்" என்றொரு வரி, ஆணியைப் பிடுங்கும் பற்றுக்குறடு என்ற சொல் எத்தனை அழகானது!!

கருத்துகள் இல்லை: