சனி, 29 அக்டோபர், 2016

பசியோடு கசியும் நாள்

2012-ல் மணி பன்னிரண்டிருக்கும் அப்பொழுதுதான் கண் விழித்தோம். அறைக்கு வெளியேயுள்ள கட்டைச்சுவரில் உட்கார்ந்தும் சாய்ந்தும் பேசிக்கொண்டிருந்தோம். மாமல்லபுரம் போவதாக சில நிமிடங்களில் முடிவெடுக்கும் முன்னே பசி குடலைத் தின்னத்தொடங்கியிருந்தது. காஃபி குடிக்கலாமென்று சென்று குடிக்காமல் திரும்பி வந்தோம். குளியல் முடித்து வெளியே கிளம்ப மணி இரண்டாகிவிட்டது.

தெருக்களில் வெடிமருந்து கிழித்த காகிதங்கள், அரசாங்கமே கடையடைப்பு நடத்தினாலும் இப்படி அடைக்கமாட்டார்கள். அங்கங்கே வேட்டு சத்தங்கள் ஒலிக்க. நாங்கள் அவரவர் அலைபேசியில் உறவுகளோடு பொய் பேசிக்கொண்டே நகர்ந்துகொண்டிருந்தோம். "பொய்யா அதுவென்ன பொய் சாப்பிட்டோம் கறிசாப்பாடுதான் சாப்பிட்டோம் என்ற தோரணையில்."

கானகம் கடந்து திருவான்மியூரில் ஒரு கடை கிடைத்தது. தக்காளி, எலுமிச்சை சாதம் ஊறுகாயோடு உண்டு கழித்து கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள நிறுத்தத்தில் பேருந்து ஏறினோம். மாமல்லபுரத்தில் மக்காச்சோளம் சாப்பிட்டுவிட்டு இரவு அறை திரும்பினோம் மதியத்தில் திறந்திருந்த கடையும் அடைபட்டிருந்தது. தண்ணீரை விழுங்கிவிட்டு கணினியில் படம் ஓட்டினோம்.  ஓலமிட்டுச் சிரித்தோம், கண்ணயர்ந்தோம்.

காலையில் கறியெடுக்கச்சென்றபோது குடலின் நினைவுகளிலிருந்து.

வெள்ளி, 28 அக்டோபர், 2016

மௌனியின் கதைகள்

மௌனியின் படைப்புகளுக்குள் ஊர்ந்து கொண்டிருக்கிறேன். காலச்சுவடு வெளியிட்டிருக்கும் அவரின் முழுத்தொகுப்பு. காதல் சாலை என்றொரு சிறுகதை, மூன்று பொழுதுகளாக பிரிந்த கதை வடிவம்.

அன்றையதினம் அவன் இளைப்பாற ஆலமரத்து நிழல் ஒதுங்கும்போது அவள் தொங்கிக்கொண்டிருக்கும் பிம்பம் மனதை அலைக்கழிக்கவும் எழுந்து விழுதுகளை உதறித்தள்ளி நகர்கிறான்.

இரவு அவனுக்கு இரவாக கழிகிறது.

முந்தையதினம் காதலைத் தேடி அலைகிறான். வழியில் நாயும் குருவியும் ஏளனம் செய்கிறது செய்வதுபோல் ஓர் மனவோட்டம். முள் குத்துகிறது மீண்டும் குத்துகிறது நடக்கிறான். கூடைக்காரியிடமும் தண்ணீர் எடுக்கப்போகும் பெண்ணின் சிரிப்பிலும் தேடாமல் தேடுகிறான். காதல். இடையில்  சந்திக்கும் ஒருவனை அவளின் அழகை கூறிய பிற்பாடு சேர்த்துக்கொண்டு நகர்கிறார்கள் ஒரு வீட்டை அடைகிறார்கள். வீட்டுக்குள் எரியும் விளக்கு அவ்வீட்டின் ஏழ்மையை வெளிப்படுத்தும் விதமாக எறிகிறதென்கிறார் கதையாசிரியர். கவிதை அவ்விடம்.

இவனுக்கு காதல் வருகிறது. எப்படி? எங்கே? எதுபோல? இவனுக்கு புரியவில்லை.

அவள் நிற்பதுவும் தீப ஒளியில் நிழலை அளந்து சொல்வதும், ஓவியனின் கைவேலை. இவன் அவளோடு தங்குகிறான் தூங்குகிறான், இடையிடையே புலம்புகிறான் விழித்திருக்கும் அவளால் புரிந்துகொள்ள இயலவில்லை.

அவனும் இவனும் கிணற்றடியில் பேசிவிட்டு அவளை எதிர்பார்த்து வராமல் போக, கொல்லைப் பக்கம் போகிறார்கள். அவள் தற்கொலை செய்துகொண்டாள் என்று ஓரிரு வார்த்தையில் சொல்லிப்போவதில் என்ன இருக்கிறது. அதற்கான அடையாளங்களை வடித்திருக்கிறார் எழுத்துக்களில்.

உணர்ந்தானா காதலை பதிலாக ஆகாயம் நோக்கி இருகையும் நீள்கிறது. இரவுக்குப்பிறகு காலையில்லை அவனுக்கு.