சனி, 27 மே, 2023

காக்கைகள் இல்லாத ஊர்

ஒரு மனிதரோடு பழகும் போதோ ஒரு புத்தகத்தை வாசிக்கையிலோ அங்கே வெளிப்படும் சொற்களை நம் வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்து எண்ணங்களை விரிவாக்கிக் கொள்வதுண்டு. "காக்கைகள் இல்லாத ஊர்" என்றொரு சிறுகதை காகங்கள் இல்லாமல் போவதற்கான காரணமாக அவ்வூரில் ஒழிந்துபோன அதற்கு உணவளிக்கும் சடங்கைச் சொல்லும் சூழலை எண்ணும் போது காக்கைகளுக்கு எந்த ஊரில் யார் சோறு வைக்கிறார்கள் என்ற கேள்வியில் எங்கள் ஊர்ப் பகுதியில் உணவு வைத்ததாக ஞாபகப் படுத்த எவ்வளவு முயற்சி செய்தாலும் தாத்தா இறந்த பின் முப்பதாம் நாள் கோயில் போகும் முகமாக குற்றாலம் சென்ற அந்த காலையில் சிவனடியார்களுக்கு அன்னம் (சமைத்த உணவு என்றெண்ண வேண்டாம், அரிசி முதல் உப்பு வரை சோற்றுக்கும் குழம்புக்குமான உணவுப் பொருட்களை அவர்களது திருவோட்டில் தானம் கொடுப்பது) வழங்கியதும் அவர்கள் அதிலிருந்து ஒவ்வொரு பிடி எடுத்து "நாளை வீட்டில் சமைத்து காக்காவுக்கு வைத்தபின் எல்லோரும் சாப்பிடுங்க" என்று சொன்னச் சொற்களும் மீதியான பழையச் சோற்றில் உள்ளியை நறுக்கிச் சேர்த்து உருண்டை பிடித்து ஓட்டில் காய வைக்கும் போது வரும் காகங்களுமே எஞ்சி நிற்கின்றன.

ஊரில் இப்படி முப்பதாம் பக்கம் கோயிலுக்கு போவது என்றால் குற்றாலம் அல்லது பாபநாசம் போவார்கள், அந்த ஒருநாள் சனிக்கிழமை விடியுமுன் கிளம்பி இருட்டிய பின் ஊருக்கு திரும்புவது வழக்கம், இப்போது இதன் தோற்றங்கள் மாறியிருந்தாலும் நிகழ்கிறது. இந்த சூழலில் கோயிலுக்கு செல்லும் போது அங்குள்ள சிவன் ஆலயத்திற்குள் நுழைவதேயில்லை, ஆற்றிலோ அருவியிலோ தலை நனைப்பதோடு சிவனடியார்களுக்கு அன்னம் கொடுத்த பின் உணவு சமைத்து உண்டு உறங்கி திரும்புவதே வாடிக்கை. இந்த நாள் என்றில்லை அருவியில் தண்ணீர் கொட்டும் நாட்களில் அங்கு குடும்பத்தோடு சென்றாலும் பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைப்பதோடு வழிபாடு முடித்து வைக்கப்பட்டு, சிவன் ஆலயத்திற்குள் ஒரு நாளும் சென்றதில்லை. ஏன்னென்று கேட்டிருந்தால் பதில் அப்படியொன்றும் விளக்கமாக வந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் சென்னை அப்படியல்ல இங்கே காக்கைக்கு உணவு வைப்பவர்கள் அதிகம், அமாவாசைச் சடங்குக்கு தெருவில் பூசணிக்காய் உடைத்துப் போடுவது என அதிகம் கண்டிராத சடங்குகள். ஒவ்வொரு பகுதிக்கும் சடங்குகளில் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். மாநகரம் எல்லாச் சடங்குகளையும் தக்கவைத்திருக்கிறது அதன் மனிதர்களோடு.

கதைக்கு வருவோம், யதார்த்தங்களை மீறிய கற்பனையில் எழும்பி நின்று எண்ணங்களா தத்துவங்களா எதுவாகினும் அதிலுள்ள முரண்பாடுகளையும் அதனால் ஏற்படுத்தப் படும் மனித விளைவுகளையும் பேசும் இப்புனைவு எழுத்தாளர் ஜீவ கரிகாலனின் "கண்ணம்மா" தொகுப்பில் வருகிறது, இந்த புத்தகத்திலுள்ள கதைகளை வாங்கிய நாளில் ஒருமுறை வாசித்திருந்தாலும் கடந்த வாரம் அலமாரியைச் சரி செய்தபோது மீள் வாசிப்பிற்காக எடுத்து வைத்திருந்தேன். இரண்டு நாள் முன் வரையத் தொடங்கி பல அடுக்கு வண்ணத் தொகுப்பிற்குப் பிறகு காக்கையொன்று வந்தமர்ந்து உரையாட ஆரம்பித்ததை (இன்னும் முடிவுராத ஓவியம் கீழே) எனது கைகளில் ஏந்தி வருடிக்கொண்டிருந்த அன்றைக்கு மறுநாள் தொலைக்காட்சி மேசைக்கு கீழுள்ள அடுக்கிலிருந்து எடுத்து புரட்டியபோது "காக்ககள் இல்லாத ஊர்" வாசிக்கக் கிடைத்தது எதன் விளைவு என ஓடும் கேள்வியும் கதையின் ஊடே பதிப்புக்குள்ளாகியிருக்கும் ஓவியர் விஜய் பிச்சுமணியின் காகங்கள் என என்னை வட்டமடிக்கத் தொடங்கியிருக்கும் இப்பறவையின் இறகுகளுக்கிடையே உலவும் காற்றை கையிலேந்த காத்திருக்கிறேன்.




கருத்துகள் இல்லை: