புதன், 24 ஜூன், 2026

அண்ணா நூற்றாண்டு நூலகம் யாருக்கானது

சில மாதங்களுக்கு முன் ஒருநாள் காலை நேரம் அலுவலகக் கூடலுக்காகக் கிளம்பினேன் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் கடந்துதான் மைலாப்பூர் செல்ல வேண்டும் என்பதால் சில ஓவியப் பக்கங்களை புரட்டலாம் என்று படியேறினேன். இருக்க இடம் இல்லாத அளவு மனிதத் தலைகள் எங்கும் பரவியிருந்தது "என்னடாயிது நுண்கலை பற்றி வாசிக்க இவ்வளவு பேரு இருக்காங்களா" என்று என்னை நானே கேட்டுக் கொண்டு ஒரு ஓரமாக தரையில் அமர்ந்து கோட்டோவியங்களில் ஆழ்ந்தேன்.

கடந்த சனிக்கிழமை Cybersecurity பற்றி வாசிக்க வேண்டுமென மூன்றாவது தளத்திற்குச் சென்றேன். அங்கங்கே இருக்கைகள் மீதம் இருந்தது. இரண்டு புத்தகங்களை எடுத்துக் கொண்டு அமர்ந்தேன் எதிரே இருந்த இருவர் மடிக்கணினியும் குறிப்பேடுகளும் வைத்து படிப்பது போல் இருந்தது. வலது பக்கத்தில் இருந்த இருக்கைகளில் ஒரு ஆணும் பெண்ணும் வந்து சிறு சலசலப்போடு அமர்ந்தார்கள். குறிப்பேட்டில் எழுதி இருப்பதை வைத்துக் கொண்டு மெல்லிய அந்தரங்கக் குரலில் அந்த ஆண் பெண்ணுக்கு ஏதோ பாடம் சொல்லிக் கொடுக்கிறான். (கொடுக்கிறான் என்று எழுதினால் கொடுக்கிறார் என்று தானாக சரிசெய்கிறது தட்டச்சு). பெரும்பான்மையானவர்கள் எவரும் அங்கிருந்த புத்தகங்களை எடுத்து வாசிப்பவர்களாகத் தெரியவில்லை. யாருக்கானது நூலகம் என்ற கேள்வி ஒலித்துக் கொண்டே இருந்தது.

கருத்துகள் இல்லை: