செவ்வாய், 20 டிசம்பர், 2016

ஒழுகும் கோடுகள்

எங்கள் இருவருக்குமிடையிலிருந்த இடைவெளியில் மௌனம் நிரம்பி, வெளியேற வழியின்றி ஒழுகிக்கொண்டிருந்தது. அவள் இத்தனை அமைதியாக இருக்கவேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை எனக்கு புரியாமல்கூட இருக்கலாம்.
குறிப்பெடுத்துவந்து யாரேனும் பேசுவார்களா என்ன, படைப்பாளிகள் மற்றவர்களோடு உரையாடும் பொழுதில் தன்னுள் வடிவம் பெரும் வார்த்தைகளை குறித்து வைத்துக்கொள்வார்கள் என அ.முத்துலிங்கம் எழுதியதை வாசித்திருக்கிறேன், அதுவும் மேலை நாட்டவர்கள் மட்டுமே இப்படியான செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள். இவளும் நானும் அளவளாவும் போது அப்படியெதற்கும் அவசியமில்லை. அவளது தற்போதைய அமைதியைப்போல.
இந்நிலையை அமைதியென்று கொள்வதா சிந்தை செய்யும் மனம் இப்படி அமர்ந்துவிடுமோ. இருக்கலாம். ஆனால் இவள் அவ்வப்போது சிரிக்கிறாள் எதற்காக என்பதை ஊகிக்க இயலவில்லை. "கேட்டுவிடலாம்தான், ஆனால் இப்போது வேண்டாம்".

உனக்கு கோடுகளை பிடிக்குமா வண்ணங்களை பிடிக்குமா என்று கேட்டதும் வண்ணங்களை பிடிக்குமென்று பொய் சொல்வதை அவள் அறிந்து கொள்ளவில்லை. இருந்தும் கோடுகளை பற்றியே உரையாடத்துவங்கினாள்.
கோடுகளுக்கும் நவீனத்திற்கும் நெருக்கம் அதிகம் என கூறும் பொழுதில் மாலதியின் இமைகளோடும் புருவங்களுடனும் புதிர் பேசத்துவங்கினேன். நவீனம் என்பதே ஒன்றை புதைத்தும் மறைத்தும் வெளிப்படுத்துவது தானே, பெண்களின் ஆடைகள் போல தற்போது ஆண்களும் இங்கே விதிவிலக்கல்ல.

நவீனத்தை தோற்றுவித்தவன் ஓவியனாகவே இருக்க முடியும் அதுவும் மங்கையின் கூந்தலிலிருந்தே கோடு நீட்டி நீட்சியடைந்திருக்க வேண்டும். இதற்கு பதிலாக அவள் கூறியதில் வியப்பேதும் இல்லை. மாலதி தனக்கு நவீன ஓவியத்தை புரிந்துகொள்வதில் சிக்கலிருப்பதாகவும் காண்கையில் களைப்படைந்து போவதாகவும் சொன்னபோது, கோடுகளுக்கும் நவீனத்திற்கும் நெருக்கம் இருப்பதாக அவள் கூறியதை நினைவுபடுத்தவில்லை. மாறாக இருட்டில் நடந்துபோக பிடிக்குமா எனக்கேட்டதற்கு ம்ஹும் என இசைத்தாள்.
உறக்கத்தில் கோர்வையற்ற கனவுகள் கண்டிருக்கிறாயா அப்படியெதுவும் நினைவிலிருக்கிறதா, ஒருவேளை உன்னால் எழுத்தாகவோ வண்ணமாகவோ கோடுகளாகவோ அதனை வெளிப்படுத்த முடியுமானால் அதை என்னால் புரிந்துகொள்ள முடியுமா, இதற்கு பதிலுண்டா. அவளிடம் மௌனம் மட்டுமே எஞ்சியிருந்தது.

4 கருத்துகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
கதையின் கருப்பொருள் சிறப்பு வாழ்த்துக்கள்
நேரம் கிடைக்கும் போது நம்ம பக்கமும் வாருங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

K. ASOKAN சொன்னது…

புதிய சிந்தனை நன்று

Pandiaraj Jebarathinam சொன்னது…

கருத்திற்கு நன்றி.!

Pandiaraj Jebarathinam சொன்னது…

புதிய சிந்தனையா!!

கருத்திற்கு நன்றி